இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி... சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூரில் தமிழக போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். ஆபரேஷன் ஸ்ட்ரோமிங் எனப்படும் இந்த சோதனையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
இலங்கையின் கொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

முக்கிய இடங்களில் சோதனை
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதனையடுத்து கொழும்புவில் பல்வேறு முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டன. நேற்று கூட, மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கை
இலங்கையில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெடிகுண்டு மிரட்டல்
சென்னை சென்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரெயில்வே போலீசார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில், கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வலைவீச்சு
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, ஆழ்வார்திருநகரை சேர்ந்த மைக்கேல் பிரீடி என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். ரயில் நிலையங்கள் மட்டுமின்றி விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications