ஸ்ரீதேவி சொத்து.. சென்னை ஈசிஆரில் 37 வருடம் கழித்து வில்லங்கம்.. தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடமிருந்து ஸ்ரீதேவி விலைக்கு வாங்கியிருந்தார். இந்நிலையில் 37 வருடங்களுகு பிறகு சம்பந்த முதலியாரின் வாரிசுகள் என்று சொல்லி மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று உரிமை கோருகிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், போனிகபூர் கொடுத்த புகாரை தாம்பரம் தாசில்தார் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வாரிசு சான்றிதழ் மூலம் எந்த சொத்துக்கும், யார் வேண்டுமானாலும் வில்லங்கத்தை உருவாக்க முடியும் என்கிற நிலை உள்ளது. சிலர் உண்மையிலேயே தாங்கள் தான் வாரிசு என்றும், தவறாக ஏமாற்றிவிற்கப்பட்டதாக வழக்கு போட முடியும். அதேபோல் ஒருவர் திடீரென தான் தான் வாரிசு என்று, வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தின் உரிமையை கேட்டு வழக்கு தொடர முடியும். அப்படி ஒரு சிக்கல் தான் ஸ்ரீதேவி சொத்துக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பற்றி பார்ப்போம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எனது மனைவி ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சொத்தை, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
அந்த சொத்தை நாங்கள் கடந்த 37 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். இந்தநிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் எனக்கூறிக்கொண்டு 3 பேர் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் திடீரென எங்களது சொத்துக்கு உரிமை கோரி வருகின்றனர். இந்த வாரிசு சான்றிதழ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மோசடியாக பெறப்பட்டிருந்தது. இந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யக்கோரி நாங்கள் அளித்த மனுவை தாம்பரம் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போனி கபூர் அளித்துள்ள மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தங்களது சொத்துக்கு சிலர் மோசடியான வாரிசு சான்றிதழ் மூலமாக உரிமை கோருவதாக போனி கபூர் அளித்துள்ள மனுவை விசாரித்து 4 வார காலத்தி்ல் தாம்பரம் தாசில்தார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications