13 ஆண்டுகால குமுறல்: இறங்காத பெட்ரோல் விலை.. ஆட்டோ, கால் டாக்ஸி இன்று ஓடாது? ஸ்தம்பிக்குதா சென்னை?
சென்னை: உழைப்பவர்களின் வியர்வையில்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அந்த உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காதபோதுதான் போராட்டங்கள் வெடிக்கின்றன.. அந்தவகையில் இன்று சென்னையில் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்..
சென்னையில் இன்று ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸிகள் ஓடாது என்ற அதிரடி அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.. கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக ஓட்டுநர்கள் பெரும் கவலையில் உள்ளனர்..

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துவிட்ட நிலையிலும், வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரித்துவிட்ட சூழலிலும் பழைய கட்டணத்திலேயே வண்டி ஓட்டுவது என்பது தற்கொலைக்குச் சமம் என ஓட்டுநர்கள் குமுறுகின்றனர்..
பெட்ரோல் விலை உயர்வு
எரிபொருளின் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் உதிரிபாகங்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது.. இந்த நிலையில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேறு வழியின்றி போராட்ட களத்தில் குதித்துள்ளனர்..
கடந்த மாதம் 26ம் தேதியே தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும், பயணிகள் ஆட்டோவில் வணிக ரீதியான சரக்குகளை ஏற்றிச் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது..
ஆட்டோ டிரைவர்கள்
மேலும், வாகனங்களின் இருப்பிடத்தை கண்டறியும் ஜி.பி.எஸ் கருவியை அரசே விலையில்லாமல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.. போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் ஜாஹிர் உசேன், நிர்வாகிகள் தம்பி குணசேகரன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்..
சுமார் பல மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை.. ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் சரியான உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது..
வேலை நிறுத்த போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த ஓட்டுநர் சங்கத்தினர், ஏற்கனவே அறிவித்தபடி பிப்ரவரி 10-ஆம் தேதியான இன்று சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் இன்று ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸிகள் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. அலுவலகம் செல்வோரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது..
தனியார் நிறுவனங்களான ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் இயங்கும் வாகனங்களை முறைப்படுத்த 'அக்ரிகேட்டர்' சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் இவர்களின் இன்னொரு கோரிக்கையாக இருக்கிறது.. முறையான அனுமதி பெறாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்..
இன்று ஆர்ப்பாட்டம்
மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் ஏற்கனவே போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இன்று சென்னையில் கிண்டி போக்குவரத்து ஆணையரகத்தின் முன் மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.. ஆட்டோ ஓட்டுநர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு காதுகொடுத்து கேட்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..
13 ஆண்டுகளாக ஒரு தொழிலின் ஊதியத்தை மாற்றாமல் இருப்பது நியாயமா?.. ஒருபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம், மறுபுறம் விலைவாசி உயர்வு என இருமுனைத் தாக்குதலில் சிக்கியுள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு என்ன செய்யப்போகிறது?.. மக்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பே தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்க துவங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications