தவெக கொடி.. உத்தரவு வரப்போகும் நேரத்தில் புதிய மனு போட்ட பகுஜன் சமாஜ் கட்சி!
சென்னை: தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் ஆஜராகி வாதிட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் வழக்கறிஞர் பி.ஆனந்தன் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது அல்ல. பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழக வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தவெக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும், தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களை குழப்பும் வகையில் தவெக கொடி உருவாக்கப்படவில்லை. இதனால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவெக தரப்பில் வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் முழுமையான வாதங்கள் வைக்கப்படாத நிலையில் வழக்கில் ஜூலை 3 ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் முன்வைக்க அனுமதிக்கக் கோரியும், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் நாளை மேற்கொண்டு வாதங்களை முன் வைப்பது தொடர்பாக பதில் அளிக்க தவெக தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications