சோழப் பேரரசு பங்களிப்பை போற்ற வருகிறது "சோழர் அருங்காட்சியகம்.." அமைச்சர் பிடிஆர் அதிரடி அறிவிப்பு
இன்று தாக்கலான தமிழ்நாடு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.
சென்னை: இன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், இந்தப் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. சோழ அருங்காட்சியகம் குறித்தும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது.
இதனிடையே இன்று திமுக அரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மூன்றாவது முறையாக இந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அமைச்சர் பிடிஆர்
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும். காலை 10 மணிக்குத் தமிழ்நாடு சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.. இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபை தொடர் ஏற்கனவே ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியதால், ஆளுநர் ஆர். என் ரவி உரை இடம்பெறவில்லை. இந்தப் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் அறிவித்தார்.

சோழப் பேரரசு
மேலும், கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்கத் தமிழ்ப் பண்பாட்டு தல வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என்றார். இந்த செம்மையான பயணங்கள், கலை, பண்பாடு, கைவினை பொருட்கள், உணவு முறையை வெளிக் கொண்டுவருவதோடு தமிழ்நாடு புகழையும் இது பரப்பும் என்றார் மேலும், சோழப் பேரரசு பங்களிப்பைப் போற்றும் வகையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பிடிஆர் அறிவித்தார்.

கடல் கடந்த சோழர்கள்
இது குறித்து அமைச்சர் பிடிஆர் மேலும் கூறுகையில், "நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். கடல் பல கடந்து, சமர் பல வென்று, இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு.

மாபெரும் சோழர் அருங்காட்சியகம்
தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின.உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப்போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் "மாபெரும் சோழர் அருங்காட்சியகம்" ஒன்று அமைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பிடிஆர்
தொடர்ந்து பேசிய அமைச்சர் பிடிஆர், "இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி செய்வதற்கான ஒப்புதலை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் பெற்று, மூன்று கப்பல்களில், 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் 102 டன் மருந்துப் பொருட்கள் ஆகியன, 197கோடி ரூபாய் செலவில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையிலும் அவர்களுக்கு, பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக, 3,510 வீடுகளுக்கான பணிகள் 176 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள
3,959 வீடுகளைக்கட்ட, வரும் நிதியாண்டில் 223 கோடி ரூபாயை அரசு வழங்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications