எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்.. ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை.. அமைச்சர் நாசர் அறிவிப்பு!
சென்னை : பால்வளத்துறையில் 48 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் 'எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட்டைத் தொடர்ந்து துறை ரீதியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் வகைகள் மற்றும் பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம், தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பால் உற்பத்தியில் எருமை மாடுகளின் பங்களிப்பு முக்கியமாக உள்ளதால் 'எருமைக் கன்று வளர்ப்பு திட்டம்' நடைமுறைப்படுத்தப்படும். எருமைக் கன்று வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மூலம் வளர்க்கப்படும் எருமை மாடு, கன்று ஈனும் வரை கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் நாசர்.
ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட் உற்பத்தி யூனிட் நிறுவப்படும், ஆவின் பண்ணைகளில் ரூ. 30 கோடி செலவில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அதிகபட்சமாக ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல், பால் பொருட்களின் விற்பனை ரூ.553.62 ல் இருந்து 4 ஆண்டுகளில் ரூ.574.5 கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், ஆவின் பால் தினசரி விற்பனை 26.41 லட்சம் லிட்டரில் இருந்து 29.13 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளில் 10.3% விற்பனை உயர்ந்துள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என அச்சிட வேண்டும் என FSSAI அறிவுறுத்தியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நாசர், "தயிரை தஹி என்கிறார்கள். தஹிக்கு இங்கு நஹி. பால் இங்கே தூத் ஆகாது.. தயிர் இங்கே தஹி ஆகாது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு. அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications