பஸ் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து.. அரும்பாக்கத்தில் அலறிய மக்கள்!
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் அரசுப் பேருந்தை இயக்கி கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் வாகனங்களில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் அரசுப் பேருந்து மோதி 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னையில் கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அரும்பாக்கம் 100 அடி சாலையில் வந்த போது, திடீரென பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சிக்கி 50 வயது மதிக்கத்தக்க நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அறிந்து சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வந்தனர். இதன்பின் உடனடியாக அரசுப் பேருந்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கார்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விபத்து ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் வேலுமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
பேருந்தை ஓட்டிய போதே மாரடைப்பு காரணமாக டிரைவர் வேலுமணி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் 4 கார்கள் சேதம் அடைந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications