தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு! 4 மாதங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களின் விலையை அதிகரிக்க கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க போக்குவரத்துத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே இருக்கிறது. தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்த டீசல் விலையும், இப்போது இருக்கும் டீசல் விலைக்கும் வேறுபாடு இருக்கிறது. எனவே இதனை சுட்டிக்காட்டிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பேருந்து கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "கர்நாடகாவிலும், கேரளாவிலும் ஓரு கி.மீ தூரத்திற்கு ரூ.1க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் 58 பைசா வசூலிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "கட்டணம் நிர்ணயிக்க நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே போக்குவரத்து துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. உயர்மட்டக் குழுவை நியமித்ததற்கான அரசாணை கடந்தை 2024 டிச.6ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், மக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அடுத்த 4 மாதங்கள் கழித்து தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயருமோ என்று கேள்வி எழுந்திருக்கிறது. கடைசியாக தமிழ்நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்ந்தது. அதற்கு முன்னர் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் 30 கி.மீ. தூரத்திற்கு முன்பு 17 ரூபாயாக கட்டணம் இருந்தது. புதிய உயர்வு மூலம் 24 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் பேருந்து போக்குவரத்து உரிமையாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்துவதாகவே இருப்பதாக மறுபுறம் புகார்கள் எழுந்துள்ளன. இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகட்டும், பண்டிகை நாட்களில் பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்துவதாகட்டும் தனியார் பேருந்து உரிமையாளரின் செயல்பாடுகள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல், தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் போதும், விமானங்களுக்கு இணையான கட்டணங்களை தனியார் பேருந்துகள் வசூலிக்க தொடங்கிவிடுகின்றன. இவர்களுக்கு என கட்டணத்தை முதலில் நிர்ணயம் செய்ய வேண்டும். இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை தாண்டி வசூலிக்கும் பேருந்துகளை உடனடியாக ஜப்தி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications