ஹேப்பி நியூஸ்.. தொடங்கபோகுது தமிழகம் ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்து. முன்பதிவும் தேவையில்லை
சென்னை: வரும் 25ம் தேதி முதல் தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 25ம் தேதி முதல் பேருந்துகளில் ஆந்திராவோ அல்லது ஆந்திராவில் இருந்து தமிழகம் வர முன்பதிவு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி நாடு முழுதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பேருந்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க பேருந்து சேவை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் நிறுததப்பட்டது. சுமார் 6 மாதங்ளுக்கு பிறகே பேருந்து சேவை செப்டம்பர் மாதம் தான் இயல்புநிலைக்கு வந்தது.
ஆனாலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பேருந்துகள் இயக்கப்படவில்லை. இபாஸ் முறையும் கைவிடப்படவில்லை. இதனால் இருமாநில எல்லை மக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். குறிப்பாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வருவதோ, இங்கு உள்ளவர்கள் கர்நாடகா செல்வதோ கடினமாக இருந்தது.இதற்கான தடை அண்மையில் நீங்கியது. கர்நாடகா தமிழகம் இடையே பேருந்து சேவை தொடங்கியது.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழகம் ஆந்திரா இடையே முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் வகையில் பேருந்து சேவை ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதை ஏற்று தமிழக அரசு வரும் 25ம் தேதி முதல் தமிழகம் ஆந்திரா இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 25ம் தேதி முதல் பேருந்துகளில் ஆந்திராவோ அல்லது ஆந்திராவில் இருந்து தமிழகம் வர முன்பதிவு செய்ய தேவையில்லை