காட்டாற்று வெள்ளத்தில் 18 மணி நேரமாக சிக்கித் தவிக்கும் பேருந்து.. வேலூர் அருகே 15 பயணிகள் தவிப்பு!
சென்னை: வேலூர் அருகே அரூரில் காட்டாற்று வெள்ளம் காரணமாக நேற்று இரவு பேருந்து ஒன்று நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில், 18 மணி நேரமாக பேருந்து அங்கேயே சிக்கித் தவிக்கிறது. பேருந்தில் இருந்த சுமார் 15 பயணிகள், யாருக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வேலூர், தருமபுரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்தது. அரூர் மலைப்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து ஜமுனாமரத்தூருக்கு நேற்று இரவு இயக்கப்பட்ட பேருந்து, நம்பியம்பட்டு அருகே சென்றபோது, அரூர் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலையில் வெள்ள நீர் சீறிப் பாய்ந்து சென்றது.
சாலையில் வெள்ள நீர் செல்வதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர், முன்னெச்சரிக்கையாக ஆற்றுக்கு முன்பாகவே பேருந்தை நிறுத்தினார். நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த சுமார் 15 பயணிகள் நேற்று இரவு முதல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, அந்தப் பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவர்கள் தங்கள் உறவினர்களையோ, தெரிந்தவர்களையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜவ்வாது மலைப்பகுதி என்பதால், மழை நேரத்தில் யாரும் வராததால் இரவு முழுவதும் அங்கேயே தவித்துள்ளனர்.
ஆற்று வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருந்தாலும், ஊர் திரும்ப முடியாமல் நடு வழியில் பேருந்திலேயே அவர்கள் தவித்து வருகின்றனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், பயணிகளுக்கு உணவு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து மீண்டும் வேலூருக்கும் திரும்ப முடியாத சூழல் உள்ளது. காரணம், அந்த பேருந்து மீண்டும் வேலூருக்கு திரும்ப வேண்டுமெனில் நாங்குநேரி ஆற்றைக் கடந்து தான் வரவேண்டும். அந்த ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரண்டு ஆறுகளுக்கும் மத்தியில் பேருந்தில் உள்ள பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications