மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து துண்டிப்பு இன்றுமுதல் இ. பாஸ் கட்டாயம் - முதல்வர்
தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மண்டலங்களுக்குள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இனி மண்டலங்களுக்குள் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இன்று முதல் 30ஆம் தேதிவரை போக்குவரத்து தடை செய்யப்படுவதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ. பாஸ் கட்டாயம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முதல்வரின் அறிவிப்பை அடுத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கும் முன்பே கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பஸ், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. அவசர காரியமாக ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் திருமணம், அவசர காரியங்களுக்கு செல்பவர்கள், உறவினர்களின் மரணங்களுக்கு செல்பவர்களுக்கு இ பாஸ் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
நான்கு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 80 நாட்களுக்குப் பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் சில மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நடைபெற்றதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சமூக இடைவெளியோடு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் பயணித்து வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொடங்கி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகரித்து வருகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் வைரஸ் பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் நடமாடுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கொரோனா உச்சத்தை தொட்டுத்தான் படிப்படியாக குறையும்... 75000 படுக்கைகள் தயார் - முதல்வர்
அதன்படி இன்று ஜூன் 25ம் தேதி முதல் 30ஆம் தேதிவரை மண்டலங்களுக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கூறினார். இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்றும் தெரிவித்தார். மாவட்டங்களுக்குள் மட்டும் பஸ் போக்குவரத்து நடைபெறும். ஒரு மண்டலத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயம் இ. பாஸ் பெற வேண்டும் என்றும் கூறினார். முதல்வரின் அறிவிப்பை அடுத்து நாளை முதல் மாவட்ட எல்லைகள் மீண்டும் மூடப்பட்டு தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.