நீலகிரியில் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் பேருந்துகள் பறிமுதல்! சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: நீலகிரி வரும் பஸ்களில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பஸ்களை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் திண்டுக்கல் அருகே உள்ள கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகிறார்கள். அதிலும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு அங்கேயே வீசி செல்வதால் அங்குள்ள சுற்றுச்சூழலுக்கு கேடாக அமைகிறது.

இதை தடுக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்தது. இந்த நிலையில், இந்த தடை உத்தரவுகள் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் தானியங்கி குடிநீர் வழங்கல் மையங்கள் தொடர்பாக தவறான அறிக்கை அளித்ததற்காக மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகிய நீலகிரி மாவட்ட ஆட்சியர், இதற்கு மன்னிப்பு கோரினார்.
மேலும், தானியங்கி குடிநீர் மையங்கள் பராமரிக்கும் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், இந்த ஏ.டி.எம். மையங்களில் நாணயம் இடும் பகுதியில் சமூக விரோதிகள், சிறு கற்களை வைத்தும், பபுள் கம்களை ஒட்டி விடுவதால் அவை செயலிழந்து விடுவதாகவும், இதற்கு மாற்றாக ஆர்.ஓ. பிளாண்ட்கள் அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை நடத்துவது என்பது கடினமான காரியம் எனவும், அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பேருந்தில் உள்ள பயணி ஒருவர் பிளாஸ்டிக் வைத்திருந்தாலும் கூட அந்தப் பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது என்றும், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் பஸ்சை பறிமுதல் செய்வது எனவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, நீலகிரி வரும் பேருந்தில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், அந்த பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications