ஜிஎஸ்டி ஏன் தேவை? மத்திய அரசை பாராட்டி வரவேற்ற லெஜண்ட் சரவணன்! அண்ணாச்சி சொன்னதை கவனிச்சீங்களா
சென்னை: ஜிஎஸ்டி குறித்த விவகாரம் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு ஜிஎஸ்டி தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டிக்கு தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் வரவேற்று பேசியுள்ளார்.
தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன். இவர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு ஜிப்ரன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று லெஜண்ட் சரவணன் சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக லெஜண்ட் சரவணன் தூத்துக்குடிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் லெஜண்ட் சரவணனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.
பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் ஜிஎஸ்டி பற்றி கேட்டதற்கு அவர் ஆதரவு தெரிவித்து பேசினார். அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஜிஎஸ்டி கொண்டு வந்த பிறகு அதனால் தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேள்வி கேட்கப்பட்டது.
அன்னபூர்ணா ஓனர் மன்னிப்பு கேட்ட விவகாரம்! தொழிலதிபரான லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி சொன்னது என்ன?
அதற்கு லெஜண்ட் சரவணன், ‛‛எல்லா நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. அப்போது தான் சீரான ஒரு பொருளாதாரத்தை உருவாக்க முடியும். இதில் குறையோ, நிறையோ, அதனை மத்திய அரசு அவ்வப்போது குழு அமைத்து மறுஆய்வு செய்து தேவையான மாற்றங்களை கொண்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது’’ என்றார். இதன்மூலம் ஜிஎஸ்டிக்கு லெஜண்ட் சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேபோல் தூத்துக்குடியில் இறங்கிய லெஜண்ட் சரவணன் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் விவகாரம் மற்றும் ஜிஎஸ்டி பற்றி கருத்து தெரிவித்தார். இதுபற்றி அவர், ‛‛கோவை உணவக உரிமையாளர் தனது கருத்துகளை எதார்த்தமாக நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தினார். அந்த கருத்து மத்திய அமைச்சர் கருத்துடன் மாறுபட்டுள்ளதால் கூப்பிட்டு பேசினார்கள். அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வலுவான இந்தியாவை உருவாக்க ஜிஎஸ்டி அவசியம்’’ என்றார்.
முன்னதாக, கோவையில் மத்திய நிர்மலா சீதாராமன் தலைமையில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ (மறைமுகமாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்) எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி.
ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள்'' என கூறினார்.
இந்த வீடியோ இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதன்பிறகு வானதி சீனிவாசனுடன் இருந்த நிர்மலா சீதாராமனை சந்தித்த சீனிவாசன் மன்னிப்பு கோரினார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் என அவர் கூறினார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. ஜிஎஸ்டியில் உள்ள குறையை கூறிய சீனிவாசனை பாஜகவினர் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ், திமுகவினர் குற்றம்சாட்டினர். அதன்பிறகு வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார். ஜிஎஸ்டியால் உருவான இந்த சர்ச்சைக்கு நடுவே தான் அதனை லெஜண்ட் சரவணன் ஆதரவு தெரிவித்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications