வேலையே போனாலும் விஜய் மாநாட்டிற்கு வரணும்! சர்ச்சையை கிளப்பிய புஸ்ஸி ஆனந்த்! கொதிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக். 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த புஸ்ஸி ஆனந்த், வேலையே போனாலும் பரவாயில்லை விஜய்யைப் பார்க்க மாநாட்டிற்கு வர வேண்டும் என்ற ரீதியில் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் கோட் திரைப்படம் வெளியானது. இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு தீவிர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்: இந்தச் சூழலில் தான் வரும் அக். 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
கட்சி மாநாட்டின் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றார். அப்போது வேலையே போனாலும் பரவாயில்லை.. மாநாட்டிற்கு வர வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகளே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புஸ்ஸி ஆனந்த்: அங்குப் பேசிய அவர், "முதலில் எல்லாரும் குடும்பத்தைத் தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்.. தொழிலில் வரும் வருமானத்தில் ஒரு சதவிகிதம் அல்லது இரண்டு சதவிகித தொகையை மட்டும் சமூக சேவைக்கு ஒதுக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது.. இதை நான் சொல்லவில்லை.. நமது தலைவரும் இதைத் தான் சொல்கிறார்.
சர்ச்சை பேச்சு: சமீபத்தில் ஒரு நிர்வாகி என்னைச் சந்தித்தார்... அக். 26, 27ம் தேதி லீவ் கேட்டாராம். ஆனால், அவரது முதலாளி அக். 26, 27 எவ்வளவு முக்கியமான நாள் அப்போ போய் நீ லீவு கேட்டால் எப்படி என்று மறுத்துள்ளாராம். அதற்கு நம்ம நிர்வாக, முதலாளி நான் 18 வருஷமா உங்க கிட்ட வேலையில் இருக்கேன்.. 2 நாள் தானே லீவ் கேட்கிறேன் எனச் சொல்லியுள்ளார். அதற்கு அந்த முதலாளி லீவ் எடுத்தால் உனக்கு போனஸ் தர மாட்டேன்.. வேலையை விட்டும் தூக்கிவிடுவேன் எனக் கூறியிருக்கிறார்.
அதுக்கு நம்ம நிர்வாகி, நீ போனஸ் கொடுத்தா கொடு.. வேலையை விட்டு தூக்குவது என்றால் கூட ஓகே.. என் தலைவனை நான் பார்க்க போகணும். உன் வேலையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். இதுபோல உண்மையான தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி நமது தமிழக வெற்றிக் கழகம்" என்று சொல்லி அழைப்பு விடுத்தார்.
இரு வேறு கருத்துகள்: புஸ்ஸி ஆனந்த்தின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடும்பத்தை பாரு என முதல் வாக்கியத்தில் சொன்னவர்.. வேலையை விட்டுவிட்டு வா என்று கடைசியில் சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேநேரம் விஜய் ரசிகர்கள், அவர் நிர்வாகி தன்னிடம் சொன்னதை மட்டுமே கூறியிருக்கிறார்.. எங்கும் வேலையை விட்டுவிட்டு வரச் சொல்லவில்லை என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications