பைபாஸ் அறுவை சிகிச்சை..ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு ஷிப்ட் ஆகும் செந்தில் பாலாஜி
சென்னை: இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. நெஞ்சுவலியால் சிரமப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் ரத்த குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் 17 மணிநேரம் சோதனை நடந்து முடிந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலி எனக்கூறி அவர் துடித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின்போது செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. இதனை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையும் உறுதி செய்தது.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாள பரிசோதனை இன்று காலை 10.40 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனைகளில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது'' என கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே கரூரில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகாலா சென்னை வந்திருந்தார். அவர் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அறுவை சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications