பென்சன் இனி கிடைக்குமா? ஓய்வூதிய செலவை விட வட்டி அதிகமா ஏறுதே? அரசு ஊழியர்களை கலங்கடித்த ரிப்போர்ட்
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களிலும் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கான செலவுகள் 2.5 மடங்கு அதிகரித்து இருப்பது, இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் ஓய்வூதிய செலவை விட வட்டி செலவு அதிகமாக இருக்கிறது. இதுபற்றி விவரமாக பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் கடன் வாங்குவது மிகவும் சாதாரணமான நடக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களுமே தங்களுடைய உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப, கடன் வாங்க மத்திய அரசால் அனுமதிக்கப்படுகின்றன. அந்த கடன்களை பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் அன்றாடச் செலவுகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்துகின்றன.

கடன் ஏன் மாநிலங்கள் வாங்குகின்றன
கடன் வாங்கும் நிலைக்கு காரணம் வரவு-செலவு பற்றாக்குறை தான். மாநிலத்தின் வருமானம் செலவை விடக் குறைவாக இருக்கும்போது, வரவு-செலவு பற்றாக்குறை (fiscal deficit) ஏற்படுவதால், மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் கடன் வாங்குவது தொடரும்போது, மொத்தக் கடன் தொகை அதிகரித்தபடியே இருக்கும். அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் ஓய்வூதிய செலவை விட வட்டி செலவு அதிகமாக இருக்கிறது.
தலைமை கணக்கு தணிக்கையாளர் தகவல்
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் முதல்முறையாக 2013-2014 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான 28 மாநிலங்களின் நிதிநிலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில், "கடந்த 2013-2014 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான மொத்தம் 10 நிதியாண்டுகளில், அனைத்து மாநிலங்களின் வருவாய் செலவினம் மொத்த செலவினத்தில் 80 சதவீதம் முதல் 87 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதாவது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 13 முதல் 15 சதவீதம் வரை உள்ளது. 2022-2023 நிதியாண்டில் வருவாய் செலவினம், மொத்த செலவில் 84.73 சதவீதமாக இருந்திருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 13.85 சதவீதமாக இருந்திருந்தது.
சம்பளத்திற்கு எவ்வளவு போகிறது
இதேபோல் கடந்த 2022-2023 நிதியாண்டில், மொத்த வருவாய் செலவினம் ரூ.35 லட்சத்து 95 ஆயிரத்து 736 கோடியாக இருந்தது. அவற்றில், சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகிய உறுதி செய்யப்பட்ட செலவு ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்து 649 கோடியாக இருந்தது. மானிய செலவு ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 625 கோடியாகவும், மானிய உதவி செலவு ரூ.11 லட்சத்து 26 ஆயிரத்து 486 கோடியாகவும் இருந்தது. மேற்கண்ட 3 பிரிவுகளின் மொத்த செலவு ரூ.29 லட்சத்து 99 ஆயிரத்து 760 கோடியாகும். இது மொத்த வருவாய் செலவினத்தில் 83 சதவீதம் ஆகும்.
வருவாய் செலவினம் உயர்வு
அதே சமயத்தில், கடந்த 2013-2014 நிதியாண்டில், மாநிலங்களின் சம்பளம், ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றுக்கான செலவு ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்து 849 கோடியாக இருந்த வந்தது. 2022-2023 நிதியாண்டில் ரூ.15 லட்சத்து 63 ஆயிரத்து 649 கோடியாக, அதாவது 10 ஆண்டுகளில், 2.49 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2013-2014 நிதியாண்டில் ரூ.96 ஆயிரத்து 479 கோடியாக இருந்த மானிய செலவு, 2022-2023 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 625 கோடியாக, அதாவது 3.21 மடங்கு உயர்ந்துள்ளது. அத்துடன் வருவாய் செலவினம் 2.66 மடங்கு உயர்ந்து விட்டது.
தமிழ்நாடு வட்டி செலவு அதிகம்
கடந்த 2022-2023 நிதியாண்டில், 19 மாநிலங்களில், சம்பள செலவு அதிகமாகவும், ஓய்வூதியம், வட்டி ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் ஓய்வூதிய செலவை விட வட்டி செலவு அதிகமாக இருக்கிறது. 2022-2023 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சந்தித்த 12 மாநிலங்களில், தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், இமாசலபிரதேசம், கேரளா, மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்கள் மட்டும் நிதிக்குழுவின் வருவாய் பற்றாக்குறை மானியங்களை பெற்றுள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வட்டி செலவு அதிகரிப்பது ஏன்
ஒரு மாநிலம் புதிதாக வாங்கும் கடனுக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே வாங்கிய பழைய கடன்களுக்கும் வட்டி கட்ட வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக சொல்வது என்றால், கடந்த 10 வருடங்களில் வாங்கிய கடன்களுக்கான வட்டியையும் சேர்த்து, மொத்த வட்டிச் செலவு கணக்கிடப்படுவது வழக்கம். எனவே மத்திய அரசின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, மாநிலங்களின் கடன் வாங்கும் செலவும் அதிகரிக்கும். இதன் காரணமாக, வட்டிச் செலவு தொடர்ந்து உயர்ந்துவிடும்.
அரசு ஊழியர்கள் சம்பளம்
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே அதிகரிக்கும். ஆனால், வட்டிச் செலவுகளை பொறுத்தவரை, பழைய கடன்களின் மொத்தத் தொகையைப் பொறுத்து வேகமாக உயரும். எனவே, ஒரு கட்டத்தில் வட்டிச் செலவு ஓய்வூதியச் செலவுகளை விட அதிகமாகிவிடும். அப்படித்தான் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வட்டிக்குத்தான் அதிக பணம் போகிறது.
வட்டி கட்ட தவறினால்
பொதுவாக மாநில அரசுகள் கடன் வாங்கும்போது, கடனைத் திருப்பிக் கொடுக்கும் கால அட்டவணை மற்றும் வட்டி விகிதங்கள் போன்ற விதிமுறைகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம் போடப்படும். எனவே ஒரு மாநிலம் சரியான நேரத்தில் வட்டியைச் செலுத்தத் தவறினால், அதன் நிதி நம்பகத்தன்மை பாதிக்கப்படும். இது எதிர்காலத்தில் எளிதாகக் கடன் வாங்குவதைக் கடினமாக்கிவிடும். மேலும், அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு (வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை) மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் சரியான நாட்களில் வட்டியை கட்டியே ஆக வேண்டும்.












Click it and Unblock the Notifications