"எந்த பயனும் இல்லை”.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கோச்சிங் தேவையற்ற செலவு.. சிஏஜி அறிக்கை!
சென்னை: அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் NEET, JEE ஆகிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என சிஏஜி அறிக்கை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் , ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட பயிற்சிகள் மாணவர்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், இந்த திட்டத்தில் 4 கோடியே 27 லட்ச ரூபாய் செலவீனங்களை தவிர்த்திருக்கலாம் என்றும் இந்திய தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 2022ஆம் ஆண்டு வரையிலான இந்திய தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீட் ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி மையங்கள் 2017 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டன. பயிற்சி மையங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் நிதியில் இருந்து 19 கோடியே 79 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
மேலும் 385 பயிற்சி மையங்களுக்கு தலா 55 ஆயிரம் செலவில் டிஷ் ஆன்டனாக்கள் வாங்கப்பட்டதாகவும், அவை 2018 ஆம் ஆண்டில் 52 நாட்களும் 2019 ஆம் ஆண்டில் 51 நாட்களும் என 103 நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு வழங்கிய வழிகாட்டி புத்தகங்களும் பயன்படுத்தப்படவில்லை., 2 கோடியே 15 லட்சம் செலவில் வழிகாட்டி புத்தகங்கள் மறுகொள்முதல் செய்யப்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் சேர்க்கை 2018ஆம் ஆண்டில் 54 ஆயிரத்து 66 ஆக இருந்தது 2019 ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 819 ஆக கணிசமாக குறைந்ததாகவும், இது அரசு அளித்த பயிற்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பயிற்சி மையங்கள் பற்றி சிஏஜி அளித்துள்ள அறிக்கை பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications