செஸ் விளையாட்டின் ”தோனி.." 19 வயதில் உலக சாம்பியன் ஆன திவ்யா தேஷ்முக்.. பின்னணி தெரியுமா?
சென்னை: இந்தியாவின் 19 வயதான திவ்யா தேஷ்முக் பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்திய வீராங்கனை ஒருவர் உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். திவ்யா தேஷ்முக்கை செஸ் விளையாட்டின் தோனி என்று அவரது பயிற்சியாளர் அழைப்பாராம். தோனி எப்படி இக்கட்டான சூழலில் கூட பதட்டமின்றி சரியான முடிவை எடுப்பாரோ அதேபோன்று திவ்யா தேஷ்முக்கும் எவ்வித பதட்டமும் இன்றி செஸ் போட்டியில் காய்களை நகர்த்துவாராம்.
பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் 19 வயதான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். இளம் வயதில் மிகப்பெரிய சாதனை படைத்த திவ்யாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

செஸ்போர்டின் தோனி - திவ்யா
திவ்யா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். சாம்பியன் பட்டம் வென்ற திவ்யாவுக்கு ரூ.43.25 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான ஹம்பிக்கு ரூ.30.25 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உலக கோப்பை செஸ் போட்டியில் சாதனை படைத்த திவ்யா தேஷ்முக்கை செஸ்போர்டின் தோனி என்று அவரது பயிற்சியாளர் கூறுகிறார்.
பிரஷரான சூழலிலும் பதட்டமின்றி செயல்படுவார்
திவ்யாவுக்கு இளம் வயதில் பயிற்சியாளராக இருந்த இண்டர்நேஷனல் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் என்பவர்தான் இந்த ஒப்பீட்டை வைத்தார். ஏனெனில் தோனி எப்படி எவ்வளவு பிரஷரான சூழலிலும் பதட்டப்படாமல் முடிவுகளை சாதுர்யமாக எடுத்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்செல்வாரோ அதேபோல, திவ்யாவும் நெருக்கடியான தருணத்திலும் பதட்டமின்றி செயல்படக்கூடியவர் என்று பயிற்சியாளர் நாராயணன் கூறியுள்ளார்.
திவ்யாவின் பெற்றோர்கள் டாக்டர்கள் ஆவர். இளம் வயதிலேயே செஸ் போட்டிகளில் ஆர்வம் கொண்டவராக திவ்யா விளங்கினார். 5 வயதிலேயே திவ்யா தேஷ்முக் செஸ் போட்டிகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டுள்ளார். 7 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் போட்டி 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், பங்கேற்று அப்போதே சாம்பியன் பட்டத்தை திவ்யா வென்றார். அதன்பிறகு பல்வேறு நாடுகளில் நடைபெற்ற செஸ் போட்டிகளிலும் அவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி
2021 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற திவ்யா, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஜூனியர் செஸ் போட்டியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். முன்னதாக 3-வது 'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் முன்னேறி இருந்தனர். இறுதி சுற்று இரு ஆட்டங்களை கொண்டது. கிளாசிக்கல் பாணியில் நடந்த இவ்விரு ஆட்டங்களும் 'டிரா'வில் முடிந்தன.
இதையடுத்து போட்டி டைபிரேக்கருக்கு சென்றது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய 'ரேபிட்' முறையில் டைபிரேக்கர் ஆட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. இதன் முதலாவது ஆட்டம் 81-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் மீண்டும் மல்லுக்கட்டினர். இதில் அனுபவம் வாய்ந்த ஹம்பி வெள்ளை நிற காய்களுடனும், இளம் நட்சத்திரம் திவ்யா கருப்பு நிற காய்களுடனும் விளையாடினர்.
இதுவே முதல் முறை
குறுகிய நேரத்தில் காய்களை நகர்த்த வேண்டிய நெருக்கடியில் ஹம்பி சில தவறுகளை செய்தார். அதை திவ்யா சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். 75-வது நகர்த்தலின் போது, திவ்யாவிடம் ராஜா, ரூக், சிப்பாய் என மூன்று காய்கள் இருந்தன. ஹம்பிடம் ராஜா, ரூக் என இரு காய் மிஞ்சியிருந்தது. ரூக்கை பரஸ்பரமாக அடிக்கு அடி கொடுத்தாலும் சிப்பாயை கடைசி கட்டம் வரை நகர்த்தி ராணியாக எடுத்து விட முடியும் என்பதால், ஹம்பி தோல்வியை ஒப்புக் கொண்டார்.
முடிவில் திவ்யா தேஷ்முக் 2½ - 1½ என்ற புள்ளி கணக்கில் ஹம்பியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். வெற்றியை வசப்படுத்தியதும் உணர்ச்சி வசப்பட்ட திவ்யா, அருகில் இருந்த தாயாரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டார்.












Click it and Unblock the Notifications