ஆபரேஷன் அதிமுக.. அங்கியே "கை" வெச்சிட்டாங்களா? டிடிவி தினகரன் + பாஜக மாஸ்டர் பிளான்.. கிலியில் தலை?
சென்னை: பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அரசியல் சூடுபிடித்துள்ளது.
இந்த முறை தேர்தலில், தென்மண்டலங்களிலும் காலூன்ற தமிழக பாஜக முயன்று வருகிறது. அதனால்தான் "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தை தொடர்ந்து முன்னெடுத்தது. ஆனால், கடைசிவரை எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கை, பாஜகவால் தளர்த்தவே முடியவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் கைவிடாமல் வைத்திருக்கிறது.

அமமுக தினகரன்: குறிப்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம், மேலிட பாஜகவுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கவே செய்கிறது.. கடந்த எம்பி தேர்தலின்போதே, அமமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சித்ததாக கூறப்பட்டது. இதற்கெல்லாம் காரணம், தினகரனின் பக்குவம் நிறைந்த முதிர்ச்சி அரசியல் + ஒவ்வொரு தேர்தலிலும் அமமுக பெற்றுவரும் வாக்கு சதவீதமும்தான்.
கடந்த சட்டமன்ற தேர்தலிலும்கூட, அதிமுகவின் வாக்குகளை பிரித்து, திமுகவை பெரும்பான்மையான வெற்றியை பெற முடியாமல் செய்ததில், அமமுகவுக்கு பெரும்பங்கு உள்ளது.. ஒன்றிணைந்த அதிமுகவாலேயே, தினகரனின் வாக்கு வங்கியை சாய்க்க முடியாதபோது, இந்த முறை எடப்பாடி பழனிசாமியால், தனித்து நின்று அமமுகவின் வாக்குகளை சிதறடிக்க செய்வது சந்தேகம்தான் என்கிறார்கள். இதெல்லாம்தான், அமமுக பக்கம், பாஜகவை சாய வைத்துள்ளதாக தெரிகிறது.
4 சீட்கள்: அந்தவகையில், கடந்த சில மாதங்களாகவே, தினகரனிடம் கூட்டணி குறித்து பாஜக மேலிடம் பேசியதாக தெரிகிறது.. குறிப்பாக, அமமுகவுக்கு 4 சீட்வரை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.. அத்துடன், தேர்தல் செலவு உள்ளிட்ட விஷயங்களையும் மேலிடமே கவனித்து கொள்வதாக, தினகரனிடம் உறுதி தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இதனால், அமமுகவில் நிறைய நிர்வாகிகள், இந்த முறை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
இப்போது விஷயம் என்னவென்றால், சமீபத்தில் 2 பாஜக புள்ளிகள், தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்கள்.. இந்த பேச்சுவார்த்தையின்போது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குறித்தும், சில விஷயங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி: காரணம், வரும்தேர்தலில் எப்படியாவது திமுகவின் ஓட்டுக்களை காலி செய்து, பாஜகவுக்கும் செக் வைக்க வேண்டும் என்ற ரீதியில், எடப்பாடி பழனிசாமி நிறைய வியூகங்களை எடுத்து வருகிறார்.. குறிப்பாக, பாஜகவுக்கு போட்டியாக, அதிமுகவின் தொகுதிகளிலும் நிறைய "தாராளங்களை" செய்து, "பசையுள்ள" பிரமுகர்களுக்கு சீட் வழங்க போவதாகவும் சொல்கிறார்கள்.
இதற்குதான், தினகரன் தரப்பு செக் வைக்க முடிவு செய்துள்ளதாம். செல்வாக்குமிக்க பிரமுகர்களுக்கு நெருக்கடி தந்தாலே, எடப்பாடி பழனிசாமியால் தொகுதிக்குள் செலவு செய்ய முடியாமல் போய்விடும் என்று கணக்கு போட்டுள்ளது. தன்னிடம் பேச வந்த பாஜக புள்ளிகளிடம் இதுகுறித்து பேசியதாகவும் தெரிகிறது. அந்தவகையில், தற்போது திமுகவுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதைபோலவே, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் நெருக்கடிகள் விரைவில் உருவாகலாம் என்கிறார்கள்.
வாக்கு சதவீதம்: மொத்தத்தில், வரும் தேர்தலில், 3வது இடத்துக்கு எடப்பாடி பழனிசாமியை கொண்டு சென்றுவிட்டாலே, அதிமுக தங்களுடைய கைக்கு வந்துவிடும் என்று கணக்கு போடப்படுகிறதாம்.
சமீபத்தில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஒருவர் சசிகலாவுடன் பேசிவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், தினகரனிடமும், பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்வாக தகவல்கள் வந்துகொண்டிருபப்து, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், பாஜகவுடன் சேர்ந்து, எடப்பாடிக்கு எதிரான காய்நகர்த்தலை, தினகரன் தரப்பு கையிலெடுத்துள்ளதால், அதிமுகவில் சில புள்ளிகளுக்கு நெருக்கடிகள், நெருங்கிவிட்டதாகவே சொல்கிறார்கள்..
சமாளிப்பாரா?: ஒருபக்கம் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவை சமாளிப்பதுடன், மறுபக்கம் பாஜகவையும் சமாளித்து, திமுகவையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளதால், இவைகளை எப்படி முறியடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications