"புத்திசாலி" எடப்பாடி.. ஓ, இப்படி ஒன்னு இருக்கா.. 2024 தேர்தலில் இதான் நடக்கும்: ரவீந்திரன் துரைசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு தென்மண்டலத்தில் வாக்குகள் பாதிக்காது என்கிறார் ரவீந்திரன் துரைசாமி
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சேர்ந்துதான் அதிமுகவை களவாட போகிறார்கள்.. இவர்கள் 2 பேரும் சேர்ந்ததுதான் அதிமுக என்று அரசியல் விமர்சகர், ரவீந்திரன் துரைசாமி ஆருடம் தெரிவித்துள்ளார்
கட்சியின் தலைமை பதவியை பெறத்துடிக்கும் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து 2 ஆண்டுகளாக, தேவர் ஜெயந்தி நிகழ்வை புறக்கணித்துள்ளது தென் மாவட்டங்களில் அவருக்கு எதிரான அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது...
இதையடுத்து, தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்திகள் கூடுமா? வரும் தேர்தலில் வாக்கு வங்கியில் இது எதிரொலிக்குமா? என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.

ஸ்மார்ட் முடிவு
இந்நிலையில், இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் மேற்கண்ட சந்தேகங்கள் குறித்து, அவர் சொன்ன கருத்து இதுதான்: "தங்க கலசம் விவகாரம், எப்படியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய வாய்ப்புள்ளதால்தான், நீதியரசர்கள் அரசாங்கத்திடமே தந்துவிட்டார்கள்.. இது இவர்கள் இருவருக்குமே தெரிந்த விஷயம்தான்.. ஏற்கனவே இப்படித்தான் கலசத்தை தந்திருக்கிறது.. எடப்பாடியை பொறுத்தவரை அவரால் அரசாங்க அரங்கில் பாதிக்கப்பட்டவர்கள், சசிகலா, தினகரன் ஆகியோர்தான்.

பாவம் ஓபிஎஸ்
இவர்கள் இருவருமே சசிகலாவைவிட மேலான இடத்தில் இருந்தவர்கள்.. இவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள்தான் பன்னீர்செல்வமும் எடப்பாடியும்.. இரட்டை தலைமை நன்றாகத்தான் போய்கொண்டிருக்கிறது என்று சொன்னவர், திடீர்னு கட்சியை விட்டு ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டார்.. இது பெரிய பிரச்சனையாகிவிட்டது.. கட்சிக்குள் எடப்பாடிக்கு ஆதரவு இருந்தாலும், சாதாரண மக்களிடமும்கூட, ஓபிஎஸ் மீது அனுதாபம் இருக்கிறது என்பதே உண்மை.. சாதாரண பொதுமக்களிடமே பாவம் ஓபிஎஸ் என்ற மனோபாவம் இருக்கும்போது, அவரது சமூகத்தில் இந்த தாக்கம் எப்படி இருக்கும்?

கிள்ளுக்கீரை
இப்படி கிள்ளுக்கீரையாக தூக்கி வீசிட்டுவிட்டார்களே என்ற மனப்பான்மைதான் ஏற்பட்டுள்ளது. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி, அந்த சமூக மக்கள் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொண்டால், மிகப்பெரிய எதிர்ப்பும் இருக்கும்.. தன்மீதான எதிர்ப்பை தடுப்பதற்காகவே சென்னையில் தேவர் சிலைக்கு மாலை போட முடிவு செய்துள்ளார்.. இது ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான்.. பசும்பொன்னுக்கு சென்று அங்கு அச்சமூகத்தினர் ஒன்று திரண்டு எதிப்பு காட்டி, அது ஊடகங்களில் பெரிதாகி மதிப்பை குலைப்பதைவிட, அங்கே போகாமல் இருப்பதே சிறந்தது என்று முடிவு செய்துள்ளார்..

ஈபிஎஸ் + ஓபிஎஸ்
ஆனால், தேர்தல் சமயத்தில், இது பாதிப்பை ஏற்படாது.. காரணம், சசிகலா இப்போதைக்கு களத்தில் இல்லை.. டிடிவி தினகரன், அவருக்கான 3 சதவீத வாக்கு சதவீதத்தை வலுவாக தக்க வைத்துகொண்டுவிட்டார்.. அதிமுகவுக்குள் இப்போது நடந்து கொண்டிருப்பது ஈபிஎஸ்ஸா? ஓபிஎஸ்ஸா? என்பதுதான்.. இந்த சண்டையில் எடப்பாடிதான் மேலே வருவார்.. ஓபிஎஸ்ஸுக்கும் பொதுமக்களிடமும், முக்குலத்தோரிடமும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.. அதாவது, அதிமுக என்பதே ஓபிஎஸ + எடப்பாடி மட்டும்தான்.. இதுதான் 2024-ல் தேர்தலில் நிரூபிக்கப்படும்.. ஆனால், எடப்பாடி இதில் சற்று மேஜராக இருப்பார் என்றாலும், எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் சேர்ந்ததுதான் அதிமுகவாக இருக்க போகிறது" என்றார்,.












Click it and Unblock the Notifications