நிதானம் இல்லாமல் பேசியதாக எடுத்துக்கொள்ளலாமா..? சிவி சண்முகத்தை சீண்டிய அமர்பிரசாத் ரெட்டி
சென்னை: ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் பலரும் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் ஊழலை பொருத்தமட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்துள்ளன.

முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் பலரும் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலைக்கு எதிராக பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சிவி சண்முகம் கூறுகையில், " ஜெயலலிதா குறித்து பேசும் தராதரம், யோக்கியதை அண்ணாமலைக்கு இல்லை. ஊழல் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதியுள்ளது.
குற்றவாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பதவி கொடுக்கிறார் என அண்ணாமலை மீது அவரது கட்சியினரே புகார் கூறுகின்றனர். 40 சதவீத கமிஷன் ஆட்சி என்றால் அது பாரதிய ஜனதாதான். கொலை, பலாத்காரம் வழக்கு குற்றவாளிகளுக்கெல்லாம் பணம் வாங்கி பாஜகவில் பதவி வழங்கி வருகிறார். எம்பியாகவோ எம்எல்ஏவாகவோ ஏன் கவுன்சிலராக கூட இதுவரை அண்ணாமலை வெற்றி பெற்றது கிடையாது.
அதிமுகவை பிடிக்கவில்லை என்றால் அண்ணாமலை விலகி கொள்ளலாம். டெல்லியில் அண்ணாமலையை வைக்துக் கொண்டே எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கூறினார். அண்ணாமலை தலையில் கொட்டுவது போல அவரை வைத்துக் கொண்டே அமித்ஷா கூறினார். அப்போதே அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என சொல்லியிருக்கலாமே" என்று ஆவேசமாக கூறினார்.
இந்த சூழலில் தமிழக பாஜக நிர்வாகியும், அண்ணாமலைக்கு நெருக்கமானவருமாக அறியப்படும் அமர்பிரசாத் ரெட்டி சிவி சண்முகத்தை சீண்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அமர்பிரசாத் ரெட்டி ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- "நடு ராத்திரியில், 'அம்மாவுக்குப் பதில் சின்னம்மா' என சொன்ன சி.வி. சண்முகம் பின், அதே சசிகலா அவர்களை துரோகி என்றார். இப்போது அண்ணாமலை அவர்களை பற்றி பேசுகிறார். சசிகலாவைப் பேசியது போலவே நிதானமற்ற நிலையில் பேசியதாகவே, இதையும் எடுத்துக் கொள்ளலாமா? எப்படியோ டாஸ்மாக் வருமானம் கூடுது!" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications