அண்ணாசாலை அதிருது.. நேராவே போயிட்டாரு வைகோ.. ஸ்டாலின் கையெழுத்து போட்டுட்டாராமே? மதிமுக மகிழ்ச்சி
சென்னை: திமுக கூட்டணியில் தொடர் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், மதிமுகவுக்கு இன்றைய தினம் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் என 3 தரப்பினர் தேர்தலை சந்திக்க போகிறார்கள்.. எனவே, மும்முனை போட்டி எழும் என்று தெரிகிறது.. ஆனால் 3 தரப்பிலுமே இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. உறுதியாகவும் இல்லை

திமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. வலுவான, பலமான கூட்டணியாக திகழ்கிறது என்றாலும்கூட, இன்னும் இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இழுபறிகள்: 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.. 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விசிக, மதிமுக, காங்கிரஸ் என 3 கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன.
விசிகவுக்கு 2 சீட் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை போல அல்லாமல், 2 தனித்தொகுதியில் தனி சின்னத்தில் போயிடவும் வாய்ப்பு தந்துள்ளது. எனினும், இன்னொரு சீட் வேண்டும் என்று விசிக கேட்டு வருவதால், உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.. கூடுதலாக ஒரே ஒரு தொகுதியை கேட்டாலும், அதுவும் பொதுத்தொகுதியே என்பதாலும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என்றும் விசிக சொல்வதால், இது திமுகவுக்கும் சிக்கலை தராது என்கிறார்கள்..
வைகோ அதிருப்தி: அதுபோலவே, மதிமுகவும், தங்களது கட்சிகளின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில், கூடுதலாக ஒரு தொகுதியை கேட்பதுடன், தங்கள் சின்னத்திலேயே போட்டியிடவும் விரும்புகிறது. அதுவும் இல்லாமல், பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக கோர்ட்டுக்கும் மதிமுக சென்றுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி வரும்நிலையில், இன்றைய தினம், மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
கூட்டணி தர்மம்: இதில், மதிமுகவை பொறுத்தவரை, ஒரு இடத்தை பெறுவதில் உடன்பாடில்லையாம். எனினும், கூட்டணி தர்மத்துக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுவும் சிட்டிங் தொகுதியாக இருக்கும் ஈரோட்டில் மறுபடியும் மதிமுக போட்டியிட வாய்ப்பில்லை என்பதால், அதற்கு பதிலாக திருச்சி தொகுதி கிடைக்கலாம் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, வைகோவின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதால், அதன் பிறகு மறுபடியும் ராஜ்யசபா சீட்டை ஒதுக்க உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இன்று ஒப்பந்தம்: அந்தவகையில், மதிமுகவுக்கு ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. எனவே, இன்று காலை 11.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை, பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசி, தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பேட்டி: இந்நிலையில், மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். செய்தியார்களிடம் பேசிய வைகோ, எந்ததொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும்.. மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை...
மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள்... ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மன நிறைவு தான் என்று வைகோ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications