மறக்கவே முடியாது.. அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறிய கருணாநிதி.. நினைவுகளை பகிர்ந்த பிடிஆர்
சென்னை: ‛‛அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறி கருணாநிதி பேசியதை மறக்கவே முடியாது'' என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார். திமுகவின் ஐடி விங்க் சார்பில் செப்டம்பரை திராவிட மாதம் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட மாத கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இன்று இரவு திராவிட பொருளாதாரம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பொறுப்புள்ள அரசு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டும்! பாயிண்ட் பாயிண்டாக விளக்கி சொன்ன அமைச்சர் பிடிஆர்
அமைச்சர் பிடிஆர் பங்கேற்பு
திமுகவின் ஐடி விங்க் சார்பில் டுவிட்டர் ஸ்பேஜில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது திமுக அரசின் திட்டங்கள் பற்றியும், செயல்பாடு குறித்தும் அவர் விளக்கி பேசினார். மேலும் தமிழக பொருளாதார நிலவரம் பற்றியும் கூறினார். அதோடு பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.
கருணாநிதியுடனான உறவு
இந்த வேளையில் கபிலக்குமார் என்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒரு கேள்வி கேட்டார். தலைவர் கருணாநிதியுடன் உடனான உறவு பற்றி நினைவு கூற முடியுமா என அவர் கேட்ட கேள்விக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு தலைவருடன் (கருணாநிதி) அதிககாலம் நெருங்கி பழகும் வாய்ப்பு அமையவில்லை. நான் வெளிநாட்டில் இருந்ததால் இது நடைபெறவில்லை.
மிகச்சிறந்த மனிதர்
எனக்கு 6 வயதா? 5 வயதா? என தெரியவில்லை. தலைவருடன் எடுத்து கொண்ட போட்டோ என்னிடம் உள்ளது. கலைஞர், நாவலருடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இன்னும் உள்ளது. இது நினைவுக்குரியது. தலைவர் மிகச்சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவருடன் உடனான சந்திப்பு என்பது 2006ல் நடந்தது. அப்பா தவறியபோது அப்பாவின் இடத்துக்கு வரும்படி பேசினார். அப்போது முதல் தலைவருடன் தொடர் பழக்கம் ஏற்பட்டது. இது மறக்க முடியாதது.
நிறைய பேரை பார்த்தது இல்லை
தலைவருக்கு நேரம் இல்லாமல் இருந்தாலும் கூட அனைவரிடமும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அனைவரிடமும் அவர் நல்ல உறவில் இருந்தார். தனிப்பட்ட பாசம் வைத்திருந்தார். கோபப்பட்டாலும் அதனை உடனே மறப்பதை கொண்டவர் தான் தலைவர். ஒருவர் கூறும் விஷயத்தை நன்றாக கேட்கும் திறன் கொண்டவராக இருந்தார். இத்தகைய குணாதிசயங்களோடு நான் நிறையபேரை பார்த்தது இல்லை. தலைவர் என் கையை பிடித்து சிரிச்சி பேசிய போட்டோவை நினைவாக ப்ரொபைலாக வைத்துள்ளேன்'' என கூறினார்.