ஓபிஎஸ் கோஷ்டியால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமா.. ஆர்ப்பாட்டத்தில் ஓபன் சவால் விட்ட ஜெயக்குமார்!
சென்னை: தமிழ்நாட்டில் ஓபிஎஸ் கோஷ்டியால் ஆர்ப்பாட்டமோ, கூட்டமோ நடத்த முடியுமா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்ற படிகளை நாடிய நிலையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது. இதனைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் வலிமையான தலைமை என்பதை நிரூபிக்க இபிஎஸ் பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறார்.
ஒரு பக்கம் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பது, இன்னொரு பக்கம் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு காய்களை நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இதன் ஒரு பகுதியாக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பில் சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் அரசாகவே திமுக அரசு செயல்படுகிறது.

பேனா நினைவு சின்னம்
தமிழகம் முழுவதும் கழக அமைப்பு சார்ந்த மாவட்டங்களில் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இவற்றை காதுகொடுத்து கேட்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது. கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு முதற்கட்ட அனுமதி கொடுத்து இருந்தாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும்.

பறிபோகும் சென்னையின் அடையாளம்
சென்னையின் அடையாளமே பறிபோகும் நிலை ஏற்படும். எதிர்க்கட்சி எனும் பெயரில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். கருணாநிதி புகழ்பாடும் அரசாகவே இந்த அரசு உள்ளது. அறிவாலயத்தில் பேனா சிலை வைக்க வேண்டியது தானே என்று விமர்சித்தார்.

ஓபிஎஸ்-க்கு சவால்
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்ற பண்ருட்டி ராமசந்திரனின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது அவரின் தனிப்பட்ட கருத்து. அதிமுக சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர். ஓபிஎஸ் கோஷ்டியால் அதிமுக கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் ஏதாவது கூட்டமோ ஆர்பாட்டமோ நடத்த முடியுமா என்று சவால் விடுத்தார்.












Click it and Unblock the Notifications