தமிழகத்தில் அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்து செல்லலாமா? ரூல்ஸ் என்ன.. அதிகாரப்பூர்வ விளக்கம்
சென்னை: தருமபுரியில் அரசுப் பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், பேருந்துகளில் இறைச்சியை எடுத்துச் செல்லலாமா என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த வாரம் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அரூர் பகுதியில் பெண் ஒருவர் பீஃப் பக்கோடா கடையை நடத்தி வருகிறார்.

இவர் தர்மபுரி மொரத்தூர் அருகே வசித்து வருகிறார். சமீபத்தில் அந்த பெண் தனது கடைக்குத் தேவையான மாட்டிறைச்சியை வழக்கம் போலத் தனது ஊரிலிருந்து எடுத்துக் கொண்டு அரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
மாட்டிறைச்சி: பேருந்தில் ஏறிக் கொஞ்ச நேரம் கழித்து அந்த பேருந்தின் நடத்துநர் ரகு என்பவர் என்ன எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். உடனே மாட்டிறைச்சி எல்லாம் எடுத்து வரக்கூடாது என்று சொன்ன அந்த நடத்துநர் ரகு, அந்த பெண்ணுக்கு டிக்கெட் வழங்க மறுத்துள்ளார். மேலும், அங்கேயே பஸ்ஸை நிறுத்தி கீழே இறங்க சொல்லியுள்ளார்.
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் இறக்கி விட்ட டிரைவர், கண்டக்டர் மீது பாய்ந்தது வன்கொடுமை சட்டம்!
அங்கே பேருந்து நிறுத்தம் கூட இல்லாத நிலையில், அருகே இருக்கும் பேருந்து நிலையத்திலாவது இறக்கவிடுங்கள்.. அவ்வளவு தூரம் நடந்து போவது கஷ்டம் என அந்த பெண் கேட்டுள்ளார். இருப்பினும், அதைக் கூட கண்டு கொள்ளாத அந்த நடத்துநர் நடு ரோட்டிலேயே அந்த பெண்ணை இறக்கிவிட்டுவிட்டுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண் அருகே உள்ள பேருந்து நிலையம் வரை நடந்தே சென்றுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடும் நடவடிக்கை: வீட்டிற்குச் சென்ற அந்த பெண் இது தொடர்பாகத் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து போக்குவரத்துத் துறையில் இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது. பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது குறித்து அரூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமைச்சர் விளக்கம்: இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இதில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பேருந்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சிகளை எடுத்துச் செல்லலாமா என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "அரசு பஸ்களில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்லலாம். அதற்கு எந்தவொரு தடையும் இல்லை. பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற மூதாட்டி நடுவழியில் இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில் ஐந்தே நிமிடத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியாகவும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications