சட்டத்தில் விதி விலக்கு.. சசிகலா முதல்வராகலாமே.. "தமாங்" வடிவில் வந்த 'ஒளி..' குஷியில் ஆதரவாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தண்டனை காலம் முடிந்து சசிகலா விடுதலையாகி உள்ளார்.. இப்போது, அவரது கட்சியினரின் ஒரே கேள்வி "சசிகலா முதல்வராக முடியுமா..?" என்பதுதான்.

சசிகலா சிறை செல்வதற்கு முன்பாகவே முதல்வராகுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தவர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் சிறை தண்டனை கிடைத்ததால் அந்த கனவு கலைந்தது.

சசிகலா விடுதலையாகிவிட்டாலும் கூட, ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

 ஊழல் தடுப்பு சட்டம்

ஊழல் தடுப்பு சட்டம்

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 8வது பிரிவின் கீழ் இப்படியான ஒரு முட்டுக் கட்டை அவர் முன்பு வந்து நிற்கிறது. இந்த சட்டப்பிரிவின்கீழ், சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக சிறைக்கு போனவர்கள், சிறையிலிருந்து விடுதலையான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

கிங் மேக்கர் சசிகலா

கிங் மேக்கர் சசிகலா

2021ம் ஆண்டு ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த சட்டசபை தேர்தலிலும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் சசிகலாவால் போட்டியிட முடியாது என்பது பொதுவான ஒரு கருத்து. "எனவேதான், சசிகலா குயினாக இருக்க முடியாது.. கிங் மேக்கராக இருக்கலாம்" என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். அதாவது அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரை அதிமுக முதல்வராக்க வாய்ப்பு இருக்கிறது.. அல்லது, அதிமுக சசிகலாவை ஏற்காவிட்டால்.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக வேறு ஒருவரை முதல்வராக்க வாய்ப்பிருக்கிறது.. இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருந்த போதிலும் சசிகலா முதல்வராகும் வாய்ப்பு அமையாது.. அதற்கு சட்டம் இடம் கொடுக்காது.. என்பது இவர்கள் வாதம்.

முன் உதாரணம் இருக்கே

முன் உதாரணம் இருக்கே

விதிமுறை என்று ஒன்று இருந்தால் விதிமுறை தளர்வு என்ற ஒன்று இருக்கத் தானே செய்யும். அப்படித்தான் இந்த சட்டத்திலும் விதிமுறை தளர்வு இருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள். இந்த தகவல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினருக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வழக்கு உதாரணமாக காட்டப்படுகிறது.

ஓராண்டு தண்டனை பெற்ற தமாங்

ஓராண்டு தண்டனை பெற்ற தமாங்

பிரேம் சிங் தமாங், கால்நடை துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது 1996 ஆம் ஆண்டு. இந்த வழக்கும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு போல நீண்ட காலமாக நடைபெற்றது. இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓராண்டு தண்டனை விதித்தது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சிறைதண்டனை முடித்துக்கொண்டு அவர் வெளியே வந்தார்.

தமாங் கட்சி வெற்றி

தமாங் கட்சி வெற்றி


மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறினார்கள். 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இவரது தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பாஜகவோடு கூட்டணி வைத்து, மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 17 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. அடுத்து என்ன.. பிரேம் சிங் தமாங் முதல்வராக வேண்டியதுதான் பாக்கி. கட்சியினர் அதைத்தான் விரும்பினர். அதை மட்டும்தான் விரும்பினர்.

எம்எல்ஏவாக வேண்டும்

எம்எல்ஏவாக வேண்டும்

ஆனால், முதல்வராக வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டசபையில் ஏதாவது ஒரு அவையில் இவர் உறுப்பினராக வேண்டும் என்பது அவசியம். எனவே என்ன செய்வது என்று யோசித்தார். எவ்வாறு தேர்தல் ஆணையத்தை அணுகினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தனக்கு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை தளர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை தேர்தல் ஆணையமும் பரிசீலித்தது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

தளர்வு கொடுத்தார்கள்

தளர்வு கொடுத்தார்கள்

பரிசீலித்த தேர்தல் ஆணையம் அந்த சலுகையை இவருக்கு வழங்கியது.. ஆம்.. சலுகை வழங்கப்பட்டது! மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன், பிரிவு 11 படி தேர்தல் ஆணையம் நினைத்தால் சில காரணங்களுக்காக இந்த விதிமுறை தளர்வு வழங்க முடியும். அதாவது தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உத்தரவை ஒரு சிலருக்காக நிறுத்தி வைக்க முடியும் அல்லது அந்த தண்டனை காலத்தை குறைக்க முடியும் என்ற அடிப்படையில் அவருக்கு சலுகை கொடுக்கப்பட்டது. என்ன சலுகை என்கிறீர்களா? இந்த சட்டப்பிரிவை பயன்படுத்திய தேர்தல் ஆணையம், இவரது தகுதிநீக்க நடவடிக்கையை ஓராண்டு, ஒரு மாதம் என்று குறைந்தது. அதாவது, ஆறு வருடங்கள் தடை கிடையாது. ஓராண்டு, ஒரு மாதம் மட்டுமே தடை.

முன்னுதாரணம் காட்டி சலுகை கேட்கலாம்

முன்னுதாரணம் காட்டி சலுகை கேட்கலாம்

எனவே தமாங் சிறையில் இருந்து வெளியான காலத்தில் இருந்து கணக்கிட்டு பார்த்தால், அப்போது, அவர் இடைத் தேர்தலில் போட்டியிட இருந்த கால அவகாசத்திற்குள் ஓராண்டு, ஒரு மாதம் கழிந்து விட்டது. எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடிந்தது. தற்போது சிக்கிம் முதல்வர் பிரேம் குமார் தமாங்தான். எனவேதான், இதே சட்டப் பிரிவை பயன்படுத்தி தனக்கும் விதிமுறை தளர்வு அளிக்க வேண்டும் என்று சசிகலா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அமமுகவின் தலைமைக்கு நெருக்கமான சிலர்.

தேர்தல் ஆணையம் நினைத்தால் நடக்கும்

தேர்தல் ஆணையம் நினைத்தால் நடக்கும்

ஒருவேளை தமாங்கிற்கு வழங்கிய அதே முன்னுதாரணப்படி, தேர்தல் ஆணையம் சார்பில் சசிகலாவுக்கு சலுகை வழங்கினாலும் இன்னும் ஓராண்டு மற்றும் ஒரு மாத காலத்திற்கு சசிகலா போட்டியிட முடியாது. அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். ஒருவேளை ஓராண்டு ஒரு மாதம் கழித்து தனது கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்து அந்த தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட முடியும்.

சசிகலா கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?

சசிகலா கோரிக்கை பரிசீலிக்கப்படுமா?

அதேநேரம், இதில் சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. அதில் ஒன்று.. பிரேம்குமார் தண்டனை காலம் ஒரு ஆண்டுகள் மட்டும்தான். சசிகலா சிறையில் இருந்தது நான்கு வருடங்கள். பிரேம்குமார் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை இடங்களை வென்றது. முதல்வராக வேண்டிய நேரத்தில் அதற்கு தடையாக, இந்த சட்டப்பிரிவு, இருப்பதால் சலுகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா அரசியல் ரீதியாக தற்போது வலிமையான நிலையில் இல்லை. எனவே இவரது கோரிக்கை பரிசீலிக்கப்படுமா என்பது தெரியாது. அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதே நேரம் இருட்டில் இருப்பவருக்கு ஒரு சிறிய மெழுகுவர்த்தி விளக்கு கூட பெரிய விஷயம்தான். அதேபோலத்தான்.. சிக்கிம் மாநில முதல்வருக்கு கிடைத்த இந்தச் சலுகை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரால், ஒரு ஒளி விளக்காக பார்க்கப்படுகிறது. சட்ட வல்லுநர்கள் உதவியுடன் அரசியல் அழுத்தங்கள் மூலமாக இந்த சலுகை சசிகலாவுக்கு பெற்றுத்தரப்படுமானால், அவர் கிங் மேக்கராக இல்லாமல்.. கிங்காக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+