தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு கொடுக்க முடியுமா? ஆளுநர் மீது பாயக்கூடாது.. வானதி சீனிவாசன்
சென்னை: தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து தனியே விலக்கு கொடுக்க முடியுமா? என்றும் ஆளுநர் மீது பாயாமல் தற்கொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீட் தேர்வுக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் கூறியதை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வானதி சீனிவாசன் கூறியதாவது:- நீட் தேர்வை பொருத்தவரை பல்வேறு விவாதம், பிறகு சட்டம் தற்போது குடியரசுத்தலைவருக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் மட்டும் தனியாக விலக்கு கொடுக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் நீட் தேர்வு என்பது மீண்டும் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியுமா? என்பது ஒரு பெரிய சட்ட சிக்கல்.. இரண்டாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை உடனடியாக ரத்து செய்வோம் என்று சொன்னது திமுக.
எங்களுக்கு அந்த ரகசியம் தெரியும் என்று சொன்னவர் இன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இன்று திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆன பிறகு இன்னும் எந்த அரசியல் மாற்றத்தை முதல்வர் எதிர்பரத்துக் கொண்டு இருக்கிறார். மத்தியில் இன்னொரு அரசியல் மாற்றம் நடக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார் என்றால் அவர் கனவு காண்கிறார் என்று அர்த்தம். மத்தியில் அரசியல் மாற்றம் என்பது ஒரு போதும் ஏற்படாது.
மீண்டும் பாஜக ஆட்சி தான் அமையும். ஏற்கனவே தமிழக மக்களுக்கு ஒரு பொய் வாக்குறுதி கொடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியது போல இன்னும் ஒரு ஏமாற்று வாக்குறுதிக்கு முதல்வர் தயாராகிவிட்டார் என்பது அவரது அறிக்கையை பார்க்கும் போது தெரிகிறது" என்றார். தொடர்ந்து நாங்குநேரி சம்பவத்தை மிக மிக கொடூரமான செயல் என்று வானதி சீனிவாசன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பள்ளி மாணவர்கள் அவர்கள் படிக்கின்ற வயதிலே இவ்வளவு சாதிய வன்மத்தோடு செயல்பட முடியும் என்றால், தமிழகம் எம்மாதிரியான வருங்காலத்தை இந்த மக்களுக்கு கொடுக்க போகிறது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும் அந்த வயதில் தான் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் ஒன்றாக பழகி, ஒன்றாக விளையாடி அவர்களுக்குள் ஒரு சகோதரத்துவத்தை உருவாக்க வேண்டிய வயது அது. அதில் எப்படி ஒரு விஷமாக மனது மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.
எதோ ஒரு விதத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலையாக இருக்கலாம், அவர்கள் படிக்கின்ற புத்தகமாக இருக்கலாம், அவர்கள் பழகுகின்ற சமுதாயமாக இருக்கலாம்.. ஆனால் எதுவாக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை இது எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதை அத்தனை பேரும் அரசியல் வேறுபாடு இல்லாமல், அத்தனை பேரும் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்.
ஆனால் இன்னொரு நேரத்தில், சமூக நீதி பேசுகின்ற மண்.. இது பெரியார் மண்.. இங்கு தான் இந்தியாவிற்கே சமூக நீதியை காட்டுகிறோம் என்று சொல்கின்ற இந்த மாநிலத்தில் இவர்கள் எல்லாம் பேசிகொண்டிருக்கின்ற சமூக நீதிகளும் மாணவர்களுக்கு கூட இந்த செய்தியை கொண்டு சேர்க்க வில்லை என்பது தான் மிகவும் வேதனை. இது தான் நீங்கள், பேசுறதற்கும் செயல்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதால் தான் மாணவர்கள் கூட இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications