வெளியானது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்.. பாஸ் ஆகாதவர்கள் +2 போக முடியுமா? அதிகாரிகள் சொன்ன விளக்கம்..!
சென்னை : பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் +1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா? என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வெழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி சதவீதத்தில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 86.93% மாணவர்களும், கலை பிரிவுகளில் 72.89% மாணவர்களும், தொழில்பாட பிரிவுகளில் 78.72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 0.24 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பிளஸ்-1 தேர்வு முடிவுகளின் 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், 11ம் வகுப்பில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பில் தொடரலாம் என கூறினார்.












Click it and Unblock the Notifications