ஈரோட்டில் "கால்" வைத்த எடப்பாடி.. சைக்கிள் "ராயப்பேட்டை" பக்கம் போகுதுடோய்..கம்முனு பார்க்கும் பாஜக
சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், தமாகா தலைவரிடம் இணக்கமான போக்கை கொண்டுள்ளது, அதிமுகவை பெரிதும் ஈர்த்து வருகிறது.
தமாகா தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரை, மிகவும் மென்மையானவர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார்.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை நீடித்து வருகிறது.
எம்பி சீட்: அதனால்தானோ என்னவோ, எம்பி சீட்டை மேலிட பாஜக தர முன்வந்தும், 3 முறை அந்த வாய்ப்பை அன்புடன் மறுத்துவிட்டார். இந்த முறையும் எம்பி. சீட் தருவதாக சொல்லி உள்ள நிலையில், இது தொடர்பான யோசனையை தமாகா நிர்வாகிகளிடம் வாசன் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், வாசன் முடிவு என்ன என்பது உறுதியாக தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துவிட்டதாக அறிவிக்கவும், இதை வாசன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. அதனால், இரு தரப்பையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து தனியே ஆலோசனை நடத்தியும்கூட, எடப்பாடியின் பிடிவாதத்தை வாசனால் தகர்க்கவே முடியவில்லையாம்.
வாசன் பரபரப்பு: சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாசன், "இப்போதைக்கு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக ஜனவரி மாத இறுதியில் அறிவிப்போம். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகளிடம் நாங்கள் நட்பு கட்சியாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். யார் யார் எந்தக் கூட்டணிக்கு செல்வார்கள் என்றும் தெரியவில்லை.. தமாகா, தேமுதிக, பாமக கட்சிகளே இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லையே" என்று கூறியிருந்தார்.
வாசனின் இந்த முடிவு, பரபரப்பை கிளப்பியது.. காரணம், புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியையும், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி பாஜகவையும் ஆதரிப்பதாக அறிவித்துவிட்ட நிலையில், ஜி.கே வாசன் ஏன் எந்த முடிவையும் எடுக்கவில்லை? என்ற சந்தேகங்கள் வட்டமடித்தன.
என்ன காரணம்: இந்த நேரத்தில்தான், நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்தது. அதாவது, "அதிமுக-பாஜக கூட்டணி வருமா? வராதா? உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள். இலவு காத்த கிளிபோல நாம் இருந்து விடக்கூடாது" என வாசனிடம், தமாகா நிர்வாகிகள் சொன்னார்களாம்.. இதற்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமியிடம் மீண்டும் ஒருமுறை பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன்.
அப்போது எடப்பாடி, "பாஜகவுடனான கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை. இது பாஜக தலைமைக்கே உறுதியாக தெரியும். ஆனால், நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்று சொன்னாராம் எடப்பாடி.. அதற்கு பிறகுதான் "எந்த கூட்டணியிலும் இப்போதைக்கு தமாகா. இல்லை" என்று செய்தியாளர்களிடம் வாசன் அறிவிக்க நேர்ந்ததாம்.
தமாகா வாசன்: ஆக, பாஜகவும் தமாகாவை விரும்புகிறது.. அதிமுகவும் தமாகாவை விரும்புகிறது.. இதில் யார் பக்கம் வாசன் செல்லப்போகிறார் என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று 7ம்தேதி ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில், தமாகா செயற்குழு உறுப்பினர் S.D. சந்திரசேகர் அவர்களின் தந்தையும், தமாகா மாநில இளைஞரணி தலைவர் யுவராஜாவின் தாத்தாவுமான மறைந்த துரைசாமி கவுண்டர் அவர்களின் நூற்றாண்டு விழாவும், அவர்களது சிலை திறப்பு விழாவும், வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்த சிலையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஈரோட்டுக்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி. தமாகா தலைவர் வாசனே, எடப்பாடியை போனில் தொடர்பு கொண்டு, "சிலையை நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளவும், அதற்கு உடனே சம்மதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி..
நூற்றாண்டு விழா மலரை ஜி.கே.வாசன் வெளியிட, சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். நிகழ்ச்சிக்கு பிறகு, கட்சியின் மாநில நிர்வாகிகளுடனும், எடப்பாடியிடமும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியிருக்கிறார் வாசன்... இதில் பல்வேறு அரசியல் குறித்து விவாதித்துள்ளதாக தெரிகிறது.
ஆக, "சைக்கிள்" ராயப்பேட்டை பக்கம் போகுது போல..!!












Click it and Unblock the Notifications