உடல்நலத்துக்கு ஆபத்தா? வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா? விஞ்ஞானிகள் சொன்ன விளக்கம் இதோ
சென்னை: வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது என்று வழக்கமாக சொல்லப்படுகிறது. இதற்காக அறிவியல் காரணங்களையும் சிலர் கூறுகின்றனர். உண்மையில் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுமா? இல்லாவிட்டால் அது வெறும் கட்டுக்கதையா? என்பது பற்றி விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நம்முடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு காலத்தை தூக்கத்திலேயே கழிக்கின்றோம். இப்படி தூங்கினால்தான் அடுத்த நாள் காலையில் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். மட்டுமல்லாது தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் இது குறைக்கிறது. நாம் உறங்காவிட்டால் சாப்பிட்ட உணவு கூட செறிக்காது. மட்டுமல்லாது மன நலனும் மோசமாக பாதிக்கப்படும்.

இந்த அளவுக்கு முக்கியமான தூக்கம் குறித்து நமக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. தூங்கும் போது இப்படி தூங்க வேண்டும், இந்த திசையில் படுக்க வேண்டும், இந்த திசையில் படுக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. குறிப்பாக வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு சில அறிவியல் ஆதாரங்களையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
அதாவது, "பூமியில் காந்த புலங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக வட திசையில் இந்த காந்த புலம் அதிகமாக இருக்கும். எனவேதான் உலகம் முழுவதும் உள்ள கண்டங்கள் வடக்கு நோக்கி நகர்கின்றன. இந்தியாவும் இப்படி நகர்ந்ததால்தான் இமயமலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இந்த ஈர்ப்பு விசைதான். கண்டங்களே நகரும்போது மனிதர்கள் எம்மாத்திரம். எனவே வடக்கு தலை வைத்து படுத்தால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்" என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
வேறு சிலர், "வடக்கு திசையில் தலை வைத்து உறங்கும்போது அந்த திசையில் இருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதி பிரண சக்தியை இழக்கச் செய்யும். இது நரம்பு தளர்ச்சி, இதய கோளாறுகள், மூளை கோளாறுகளை உண்டாக்கும்" என்றும் கூறுகிறார்கள்.
இன்னும் சிலர், "நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. எனவே நாம் வடக்கு தலை வைத்து தூங்கும்போது உடலில் உள்ள இரும்பு தாதுக்கள் நமது மூளையை நோக்கி வேகமாக செல்லும். இந்த அதீத வேகம் உடல் நலனை மோசமாக பாதிக்கும்" என்று கூறுகின்றனர்.
இப்படியாக எத்தனையோ காரணங்கள் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்பதற்கு சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்பது வேறு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மூன்று காரணங்களிலும் வடக்கில் அதிக காந்தப்புலம் இருக்கிறது என்பதைத்தான் அழுத்தமாக கூறுகின்றன. ஆனால், அறிவியலை பொறுத்த அளவில் வடக்கு, தெற்கு என்பது வெவ்வேறு விதமாக பார்க்கப்படுகிறது.
அதாவது, புவியியலை பொறுத்த அளவில் வடக்கு என்பது மேலேயும், தெற்கு என்பது கீழேயும் இருக்கிறது. இதே காந்த விதிகளை பொறுத்த அளவில் வடக்கு என்பது கீழே இருக்கிறது. தெற்கு என்பது மேலே இருக்கிறது. புரியும்படி சொல்வதெனில் திசை காட்டியில் இரண்டு முட்கள் இருக்கும். ஒன்று வடதுருவ முள், மற்றொன்று தென் துருவ முள்.
காந்தங்களை பொறுத்த அளவில் ஒரே திசையை கொண்ட காந்தங்கள் ஈர்க்காது. அப்படி இருக்கையில் திசைக்காட்டியில் உள்ள வட காந்த முள் எப்படி சரியாக வடக்கு திசையை காட்ட முடியும்? இங்குதான் டிவிஸ்ட் இருக்கிறது. மேலே ஏற்கெனவே நான் சொன்னதை போல புவியியல் கணக்குப்படி வடக்கு என்பது ஆர்க்டிக் பகுதி. அதாவது காஷ்மீர்தான் வடக்கு.
ஆனால் இதே காந்த விதிகளின்படி பார்த்தால் கன்னியாகுமரிதான் (அண்டார்க்டிக்) வடக்கு. எனவே காந்த முள் ஆர்க்டிக்கை (காஷ்மீரை) வடக்காக காட்டும். அப்படியெனில் அன்டார்க்டிக் பகுதியில்தான் அதிக அளவு காந்த புலம் இருக்கும். வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது என்போர் இப்போது என்ன சொல்வார்கள்? என்ற கேள்வியை விஞ்ஞானிகள் எழுப்புகின்றனர். இதன்மூலம் எந்த திசையில் வேண்டுமானாலும் தலை வைத்து தூங்கலாம். வடக்கு திசையில் தலைவைத்து தூங்குவதன் மூலமாகவே உடல்நல பிரச்சனை ஏற்படும் என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் தூக்கமின்மை என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பலருக்கு போதுமான அளவு தூங்க நேரம் கிடைப்பதே கிடையாது. அப்படி இருக்கையில் எந்த பக்கம் படுத்தால் என்ன? என்று எந்த திசையில் வேண்டுமானாலும் படுத்து நன்றாக தூங்குங்கள்.












Click it and Unblock the Notifications