சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திடுக்.. ஹேம்நாத் அட்டகாசங்கள் பற்றி சாட்சியளித்தவருக்கு மிரட்டல்?
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர், சையத் ரோஹித் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சித்ராவிற்கு அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால் ஹேம்நாத் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத்தின் நண்பர், சையத் ரோஹித் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சித்ராவின் தற்கொலையில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளதாக அவரது தோழிகள் கூறியுள்ளனர்.
பச்சை கொடி காட்டியாச்சா? அதிமுக மாஜி அமைச்சர்களை அடுத்தடுத்து குறிவைத்த
சித்ரா தற்கொலை செய்துகொண்டபோது ஹேம்நாத் அந்த விடுதிக்கு வெளியே அமர்ந்திருந்ததாகவும், குளிக்க வேண்டும் சொல்லி தன்னை சித்ரா வெளியே அனுப்பியதாகவும் ஹேம்நாத் கூறியுள்ளார். இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று அவரது தோழிகள் கூறியுள்ளனர்.
ஹேம்நாத் பொய் சொல்கிறார்
இதுகுறித்து பேசியுள்ள சித்ராவின் தோழி ரேகா,நெருக்கமான நண்பர்கள் ஒரு அறையில் தங்கும்போது எதுக்காக ஒருவரை வெளியே போக சொல்ல வேண்டும்? அதிலும் இவர்கள் இருவரும் திருமணமானவர்கள். சேர்ந்து குளிக்கும் அளவிற்கு நெருக்கமானவர்கள். சித்ரா ஹேம்நாத்தை வெளியே சொல்லியிருக்க மாட்டார் அவர் கூறுவது பொய் என ரேகா நாயர் கூறியிருக்கிறார்.
ஹேம்நாத் நண்பர் மனு
இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து
ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜாமீனை ரத்து செய்யுங்கள்
உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.