புற்றுநோயை கண்டறியும் மையங்கள் இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும்.. மருத்துவர்கள் கருத்து
சென்னை: புற்றுநோயை துவக்க நிலையில் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விட முடியும் என்று புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சாந்தா, தமிழகத்தில் புற்றுநோயை கண்டறியும் மையங்கள் இன்னும் தேவைப்படுவதாகவும் எனவே அவை இன்னும் அதிக அளவில் திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் மருத்துவ சேவைகள் பரவலாக சென்றடைந்திருந்தாலும், அங்கெல்லாம் புற்றுநோய் மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று என குறிப்பிட்டார்
நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் புகையிலை உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்களாக உள்ளனர் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என விழாவில் பங்கேற்ற மருத்துவர்கள் கூறினர்
இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை இறந்து விடுகின்றனர். காய்கறிகள், பழங்கள், நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்க முடியும். நோய் வராமல் இருக்க தினமும் அரை மணி முதல் ஒருமணி நேர உடற்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்












Click it and Unblock the Notifications