தேர்தல் செலவு... அடகில் சொத்துக்கள்.. பதைபதைப்பில் வேட்பாளர்கள்.. மே 2-ம் தேதி சொல்லும் சேதி என்ன..?
சென்னை: சட்டமன்றத் தேர்தல் செலவுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அடகு வைத்து பணம் புரட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் மே 2-ம் தேதி வெளியாகும் முடிவு எப்படியிருக்கும் என்பதை எண்ணி பலரும் பதைபதைப்பில் தவித்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் நான் அத்தனை கோடி செலவு செய்வேன், இத்தனை கோடி செலவு செய்வேன் என கட்சித் தலைமையிடம் உதார் விட்டவர்கள் பலரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் செலவுக்கு கையை பிசையத் தொடங்கினர். கொஞ்சம் பசையுள்ள வேட்பாளர்களுக்கும், தலைமையின் அறிமுகம் உள்ள வேட்பாளர்களுக்கும் இதைப் பற்றிய கவலை இல்லை.
ஏனென்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வர வேண்டியது வந்து சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால் தலைமையின் நேரடி அறிமுகமில்லாத நபர்களும், கூட்டணியில் இடம்பெற்ற சிறியக் கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்களை அடகு வைத்து தான் தேர்தல் செலவை எதிர்கொண்டிருக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதி ஒன்றின் அதிமுக வேட்பாளர் மனைவியின் நகைகளை அடகு வைத்து தேர்தல் செலவை கவனித்திருக்கிறார். இதேபோல் குளித்தலை தொகுதி திமுக வேட்பாளர்கள் தனது சொத்தை விற்று பணம் திரட்டி தேர்தல் செலவை கவனித்திருக்கிறார்.
நடிகை ராதா விவகாரம்... எல்லாத்துக்கும் காரணமே அந்த அதிமுக 'தல'தான்.. கண்ணீர் வடித்த எஸ்.ஐ. கணவர்
இதேபோல் மதுரை மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில தொகுதிகளை சேர்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் சொத்துக்களை அடகு வைத்து பணம் புரட்டியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் முடிவு சாதகமாக வந்தால் தான் வாழ்வு என்பதை உணர்ந்த அவர்கள் அனைவரும் இப்போதே நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியும் வருகின்றனர்.
திமுக, அதிமுக வேட்பாளர்களது நிலைமையே இந்த நிலை என்றால், அமமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார், மிகவும் போராடி தான் தேர்தல் செலவை எதிர்கொண்டிருக்கிறார்.