உணவு டெலிவரி பாணியில்.. வீட்டுக்கே நேரடியாக கஞ்சா டெலிவரி.. சென்னையில்தான் இந்த கொடுமை! கும்பல் கைது
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உணவு டெலிவரி செய்வதை போல் வீடுகளுக்கே சென்று கஞ்சா டெலிவரி செய்து வந்த கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது.
கஞ்சா விற்பனை, விநியோகம் என அதில் தொடர்புடைய மூன்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகிறது.
சென்னையில் வீடுகளுக்கே சென்று கஞ்சா டெலிவரி செய்த நிகழ்வை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை வேளச்சேரி
சென்னை வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் வீடுகளுக்கே சென்று ஒரு கும்பல் டெலிவரி கொடுத்து வருவதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உணவு விநியோக நிறுவனங்களின் டீ ஷர்ட்களை அணிந்துகொண்டு உணவு கொடுக்கச் செல்வதை போல் கஞ்சாவை விநியோகம் செய்வதாக புகார் கிடைத்திருக்கிறது.

வாகன சோதனை
இதன் பேரில் வேளச்சேரி ஜே 7 காவல்நிலைய காவலர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அதில் வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ரகுராம் என்பவர் வசமாக சிக்கிக் கொண்டார். அவரது டூ வீலரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் தனக்கு கஞ்சா சப்ளை செய்த மேலும் இருவர் பற்றிய தகவலை தெரிவித்திருக்கிறார்.

ஜே 7 காவல் நிலையம்
அதன் பேரில் துரித நடவடிக்கையில் ஈடுபட்ட வேளச்சேரி ஜே 7 காவல் நிலைய காவலர்கள், கஞ்சா சப்ளை செய்த தாமோதரன், பாஸ்கரன் என்ற இருவரையும் கைது செய்தனர். மேலும் உணவு டெலிவரி பாய் போல் நடித்த ரகுராம் வீட்டில் சோதனை செய்ததில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கும்பலின் முக்கியக் குறி கல்லூரி மாணவர்கள் தான் என்ற திடுக்கிடும் தகவலும் கிடைத்திருக்கிறது.

கஞ்சா வேட்டை 2.0
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளை விரட்டி விரட்டி கைது செய்து வருகிறது தமிழக காவல்துறை. இது தொடர்பான ரகசிய தகவல் யாரேனும் அளிக்கும் பட்சத்தில் அவர்களது விவரங்களை காவல்துறை பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications