கூவம் ஆற்றை யாராலும் சுத்தம் செய்யமுடியாது? எல். முருகனுக்கு ஜெயரஞ்சன் விட்ட சவால்
சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூவம் ஆறு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டிருந்த நிலையில், அதற்கு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு முறையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த வாரம் முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு நன்றாக நடைபெற்றது என்றும் அவர் பேசி இருந்தார். பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டிற்கு முறையான நிதியை ஒதுக்குவது இல்லை என்ற குற்றச்சாட்டை திமுக முதல் அமைச்சர் உட்பட திமுகவினர் பலர் தொடர்ந்து கூறிவருகின்றனர். வெள்ள நிவாரணத்தின் போது இதைப்போன்ற சர்ச்சை எழுந்தது.

அடுத்து பள்ளிக்கல்விக்கு விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்ற புகார் முன்னதாக எழுப்பப்பட்டது. அதேபோன்று தமிழக அரசிடம் இருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வரிக்கு ஏற்ப நிதி பகிர்ந்து இல்லை என்றும் திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "கூவம் ஆற்றைச் சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.500 கோடியைச் செலவிட்டுள்ளது. ஆனால், அந்தப் பணம் கூவத்திற்கு உள்ளாகவே கரைந்து போய்விட்டது. கூவத்தைச் சீரமைக்கப் பெரிய திட்டம் தீட்டப்பட வேண்டும். குஜராத் மாநிலத்தில் ஓடும் சபர்மதி ஆற்றைப் பிரதமர் மோடி சீரமைத்துள்ளார். அதைப் பார்த்தாவது கூவம் ஆற்றைச் சீரமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்"என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இவருக்கு முன்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இந்தச் சர்ச்சை பற்றிப் பதிலளித்துள்ள திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், "மத்திய அரசு உரிய நிதியை அளிக்காத போது மாநில அரசு நிர்வாகம் நடப்பது மிகப்பெரிய கஷ்டம். மத்திய அரசு நிதியளிக்காத பட்சத்தில் மாநில அரசு கடன்பெற்று நிர்வாகத்தை நடத்திவிட முடியாது. அதற்கு ஒரு வரையறை இருக்கிறது.

மாநில அரசின் மொத்த ஜிஎஸ்டி தொகையிலிருந்து 3.5%தான் ஒரு மாநில அரசால் கடன் வாங்க முடியும். ஆகவே, உடனே நிறையக் கடன் வாங்கிவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் சொல்வது தேவையற்ற வாதம். நம் வருமானத்தை வைத்துத்தான் கடன் பெறுகிறோம். வருமானத்திற்கு அதிகமாகக் கடனை வாங்கி குவித்தால்தான் ஆபத்து. அப்படி வாங்க முடியாது என்பதே நிதர்சனம்.
மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் கடனையாவது வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கப்படும்போது தமிழ்நாட்டுக்கு மட்டும் தர மறுக்கிறார்கள். கடன் பெறவேண்டும் என்றாலும் மத்திய அரசின் ஒப்புதல் தேவையாக இருக்கிறது. மாநில அரசு கடன்பெறுவதற்குத்தான் ஒரு வரம்பு உள்ளது. மத்திய அரசுக்கு அப்படி வரம்பு இல்லை. ஆகவேதான் நீங்களாவது கடன்பெற்றுக் கொடுங்கள் நாங்கள் கட்டி அடைத்துவிடுகிறோம் எனத் தமிழக அரசு கேட்கிறது. அதற்கும் அசையவில்லை மத்திய அரசு" என்கிறார்.
தொடர்ந்து கூவம் ஆறு பற்றிப் பேசிய அவர், கூவம் ஆற்றை முழுமையாகச் சுத்தம் செய்யவே முடியாது. அரசு பொதுக் கழிப்பிடம் கட்டி தருகிறது. அதை முறையாக மக்கள் பயன்படுத்துகிறார்களா? அது சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதா? இல்லை என்பதுதான் வேதனை. நான் சீனா போனபோது அங்குள்ள ரயில் அவ்வளவு சுத்தமாக இருந்தது. உடனே விசாரித்தேன்.
கடந்த 30 ஆண்டுகள் முன்பு இந்திய ரயில்களில் எந்தளவுக்குக் குப்பைகள் இருக்குமோ அதே மாதிரிதான் சீன ரயில்கள் இருந்துள்ளன. இன்று அந்த நிலை இல்லை. மக்கள் மாறிவிட்டனர். ஆற்றைச் சுத்தமாக வைக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது. ஒரு அரசு பட்ஜெட் போட்டு, வாய்க்கால் வெட்டி சுத்தப்படுத்திவிட்டால் உடனே தீராது" என்கிறார்.
திமுக மீது பாஜகவினர் வைக்கும் ஊழல் புகார் பற்றிப் பதிலளித்த ஜெயரஞ்சன், "சத்தியத்தின் ஆட்சியை நடத்துவதாகப் பேசுகிறவர்களைப் பார்த்து நான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த மாநில அரசுகளைக் கவிழ்த்து இருக்கிறார்கள். எத்தனை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். இதற்கு எத்தனை ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டன. இதற்கு எல்லாம் பணம் எங்கே இருந்து வந்தது?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications