சென்னை சாலையில் திடீர் பள்ளம்.. தலைக்குப்புற கவிழ்ந்த கார்.. அலறி அடித்து வந்த வாகன ஓட்டிகள்!
சென்னை: சென்னையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் அந்தப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற கார் தரமணி - திருவான்மியூர் சாலையில் உள்ள யூ-டர்ன் பாலம் அருகே சென்றபோது சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது, அந்த சாலையில சென்று கொண்டிருந்த கார், அந்தப் பள்ளத்தில் தலைக் குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் காரணமாக 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் போராடி மேலே தூக்கினர்.
இதனிடையே, மெட்ரோ ரயில் பணிகளால் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதாகவும், பள்ளம் ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பணிகள் நடக்கும் இடங்களில் சாலை தரத்தை பரிசோதித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications