வேளச்சேரி பாலமா.. பார்க்கிங் ஏரியாவா? படையெடுத்து நிற்கும் கார்கள்! கார்களை காக்க மக்கள் செய்த செயல்
சென்னை: வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதால், கார்களை பாதுகாத்துக் கொள்ள அங்குள்ள பாலம் முழுவதும் மக்கள் வரிசையாக கார்களை பார்க்கிங் செய்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் இன்று புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது.
கனமழையின் காரணமாக, சென்னை வேளச்சேரியில் ரேஸ்கோர்ஸ் சாலை அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் இறங்கி உள்ளது. இந்த கட்டிடத்திற்குள் கேஸ் நிலைய ஊழியர்கள் சிக்கியுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டடம் மண்ணில் புதைந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் போல, சென்னை வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியான வேளச்சேரியில், சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் மிதந்து சென்று வருகின்றன.
வேளச்சேரியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி தங்களது கார்கள் சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில், அப்பகுதி மக்கள் வரிசையாக தங்களது கார்களை பார்க்கிங் செய்து வைத்துள்ளனர். இருபுறமும், மேம்பாலம் முழுக்க வரிசையாக கார்கள் நிற்கின்றன. இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications