தப்புவாரா எடப்பாடி? ஓபிஎஸ் மலைபோல் நம்பிய வழக்கு - 4ம் தேதி விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்ட முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணை வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நிரந்தர பொதுச்செயலாளர் என்று நிறைவேற்றப்பட்டு இருந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

எடப்பாடி நடவடிக்கை
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

முன்னேறும் இபிஎஸ், தடுக்கும் ஓபிஎஸ்
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக செயலாளராக எஸ்.பி.வேலுமணியையும், புதிய அமைப்புச் செயலாளர்களையும் நியமித்து வருகிறார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வரும் சூழலில் மறுபக்கம் வழக்குகளை தொடர்ந்து கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார்.

ஓபிஎஸ் வழக்கு
அதன் ஒருபகுதியாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செலவம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு விசாரணை
அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நாளை மறுநாள் (ஆகஸ்டு 4) அன்று உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வரும் இந்த வழக்கின் முடிவுகளை பொருத்தே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தொடர்வாரா? என்பது தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications