கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தண்டனைக் கைதிகளை பயன்படுத்தக் கோரிய வழக்கு ஹைகோர்டில் தள்ளுபடி
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புக்கும், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை பயன்படுத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிறைகள் சட்டப்படி, கைதிகளை சமூக சேவைகளில் ஈடுபடுத்தி சீர்திருத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கோரி வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வில், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைதிகளை சிறைக்கு வெளியில் பணியில் அமர்த்துவது என்பது அபாயகரமானது எனவும், அவர்கள் தப்பியோட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதால், சிறைக் கைதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது எனவும் வாதிட்டார்.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறைகளிலேயே கைதிகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் அவர்களை சிறைக்கு வெளியில் அழைத்து வந்து பணியமர்த்த வேண்டிய அவசியம் எழவில்லை எனவும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications