திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு உட்பட 6 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! போலீஸ் அதிரடி
சென்னை: வீட்டு பணிக்கு வந்த பட்டியலின சிறுமியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநருங்குன்றம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கும் கனவும் இருந்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக சென்னை திருவான்மியூர் பகுதியில் மதிவாணன் என்பவரது வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து உள்ளார். இவரது தந்தை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி. இந்த நிலையில் மதிவாணனின் மனைவி மெர்லின் மாணவியை கொடூரமாகக் கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை சில நாட்களுக்கு முன் வைத்தார்.

வீட்டு வேலைக்குச் சேர்ந்ததி இருந்தே சம்பளம் வழங்காமலும், குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், தினமும் 16 மணி நேரம் வேலை வாங்கியதாக மாணவி குற்றம்சாட்டினார். தன்னை பயங்கரமாக அடித்துத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், சாதியைச் சொல்லியும் தன்னை இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாக முன் வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து மெர்லின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், "இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவல் துறை பதிவு செய்து இருக்கும் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில், "தனது குடும்பத்துடன் மெர்லின் மும்பை சென்ற சமயத்தில், குழந்தைக்கு உணவு தயாரித்து வழங்க தாமதமான காரணத்தால் ஊர் திரும்பிய பின்பு என்னை துன்புறுத்தி திட்டினார்கள். என்னை அவர்களின் குழந்தை முன்பாக தாக்கினார்கள்.
இதனை கண்டு குழந்தை தப்பாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காக பாட்டுப் போட்டு என்னை ஆடவும் சொன்னார்கள். எனக்கு சமைக்கவோ துணி துவைக்கவோ தெரியாது என்று சொன்னால் பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள். நான் என் அம்மாவை பார்த்து 7 மாதங்கள் ஆகிவிட்டன என்று அவரிடம் சொன்னதற்கு ஆடைகளை கழற்றி அடித்து துன்புறுத்தினார். 3 ஆண்டுகள் இங்கு வேலை செய்யாவிட்டால் அம்மா மீதும் தம்பி மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என எழுதி படித்துக் காட்டி கையெழுத்து போடச் சொன்னார்கள்.
அடிக்கடி சாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்தினர். பொங்கல் விடுமுறைக்காக கடந்த 16 ஆம் தேதி அம்மாவை சந்திக்க சென்றபோதுதான் நடந்த அனைத்து விபரங்களைம் கூறினேன்." என சிறுமி கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications