அடுத்த குறி திமுக எம்பிகள்? ஆ ராசா, தயாநிதி மாறன் மீது.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக திமுக எம்பிகள் ஆ ராசா, தயாநிதி மாறன் மற்றும் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சியினரும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஆ ராசா பிரசாரம் செய்ய 28 மணி நேரம் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தடை முடிந்து இன்று மாலை ஆ ராசா மீண்டும் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.
காங்கேயம் காளையுடன்.. ஜாலியாக ஒரு வாக்கிங்.. கன நேரத்தில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளர்
முன்னதாக கடந்த 29ஆம் தேதி சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக பெண்கள் வழக்கறிஞர் பிரிவு தலைவி புகார் ஒன்றை அளித்திருந்தார். பிரசாரத்தின் போது திமுகவினர் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்பிகள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.