ஆளுநர் மாளிகை அதிரடி.. திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அவதூறு வழக்கு
சென்னை: ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு என்பதை விடவும் தமிழகம் என்று அழைப்பதே சரியாக அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையிலேயே தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டசபையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் விமர்சித்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் செயலாளர், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications