சர்ச்சை பேச்சு.. காவல்துறையில் ஆஜராகாத மதுரை ஆதீனம்! நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம்
சென்னை: இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர் இன்று நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இன்று ஆதீனம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கடந்த மே மாதம் காட்டாங்குளத்தூர் பகுதியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசியிருந்த விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, "மே-2ம் தேதி காலை 9.30 மணியளவில் என்னுடைய கார் உளுந்தூர்பேட்டையில் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு கார் எங்களை மோத முயன்றது. தடுப்புகளை உடைத்துக்கொண்டு அதிவேகத்தில் வந்த கார் எங்களை இடிக்க வந்தது. இது தன்னை கொல்ல செய்யப்பட்ட சதி. இதில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் நீண்ட தாடியும், குல்லாவும் அணிந்திருந்தார்கள்" என்று குற்றம் சாட்டியிருந்தார். இது மிகப்பெரிய விவாதமாக வெடித்தது.
ஆனால் குறிப்பிட்ட தேதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆதீனத்தின் கார் மிக வேகமாக வந்திருந்தது. அக்காருக்கு இடது புறத்தில் மற்றொரு கார் மிதமான வேகத்தில் வந்த நிலையில், அதை மோதுவதை போல ஆதீனத்தின் கார் சென்றிருக்கிறது. ஆனால் நல்வாய்ப்பாக இடதுபுறத்தில் வந்த கார் உடனே நிறுத்தப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆக பிரச்சனை ஆதீனத்தின் கார் மீதுதான் என்று தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜேந்திரன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரில், ஆதீனம் இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனையடுத்து சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொது தீமைக்கும் வழிவகுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணைக்காக ஆதீனம் ஆஜராக வேண்டும் என்று கடந்த 30ம் தேதி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்லி ஆதீனம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து இன்று ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், தான் காணொளியில் ஆஜராவதாக ஆதீனம் கூறியிருக்கிறார். இதனை போலீசார் ஏற்கவில்லை. எனவே இன்று கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் ஆதீனம் இன்றும் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவர் சார்பில் மடத்தின் நிர்வாகிகள் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இரண்டு சம்மனுக்கு ஆதீனம் ஆஜராகாமல் தவிர்ந்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications