புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு.. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தவெகவினர் 2500 பேர் மீது வழக்கு
சென்னை: சென்னையில் SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தவெகவை சேர்ந்த 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகமும் SIR பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சென்னை சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, பாலமுருகன், குமார், சரவணன், தாமு, திலீப் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பெயர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொத்துக் கொத்தாக நீக்கப்படுவதாக மக்கள் கூறுகிறார்கள். இது அப்பட்டமான துஷ்பிரயோகம். அதேநேரம், போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது. புறவாசல் வழியாக ஆட்சியாளர்கள் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இது ஆளுங்கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.
குடிமகனின் உண்மையான உரிமை வாக்குரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இங்கு ஆளும்கட்சியினர்தான் தீர்மானிக்கின்றனர். இந்த நடவடிக்கையை மறு ஆய்வுசெய்ய வேண்டும். அதிகாரிகள் வீடு வீடாகச் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். பிஎல்ஓக்களை மிரட்டுவதை திமுக, பாஜக கைவிட வேண்டும். தவெக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, பிழையற்ற வாக்காளர் பட்டியல் வெளியாவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவற்றுக்கு செவி கொடுக்காவிட்டால் போராட்டம் ஓயாது." என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR பணிகளை கைவிட வேண்டும் என்றும் தவெகவினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சாலையின் தடுப்புகளும், கம்பிகளும் சேதமடைந்தன.
இந்நிலையில் சென்னையில் SIR-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தவெகவை சேர்ந்த 2500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர் அப்புனு உள்ளிட்ட 2500 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications