அனுமதியே கேக்கல.. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேரணி.. தேமுதிகவினர் மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரை காவல்துறையின் அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதாக தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருதுடன் நேற்று சென்னை வந்தடைந்தார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடி, பத்ம பூஷன் விருதுடன் வந்த பிரேமலதாவை வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார் பிரேமலதா விஜயகாந்த். திறந்தவெளி வாகனத்தில் பிரேமலதா, பத்மபூஷன் விருதைக் காட்டியபடி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேமுதிகவினர் தங்கள் வாகனங்கள் பேரணியாகச் செல்ல புறப்பட்டனர்.
அனுமதியின்றி சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேமுதிகவினரின் வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரேமலதாவின் வாகனத்துடன் தேமுதிகவினர் ஏராளமானோர் வாகனங்களில் கோயம்பேடு நோக்கிச் சென்றனர். பிரேமலதா விஜயகாந்த், பத்ம பூஷன் விருதுடன், தேமுதிக தொண்டர்கள் புடைசூழ கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வரை காவல்துறையின் அனுமதி இன்றி பேரணியாகச் சென்றதாக தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பெருமளவு கூட்டத்தை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications