லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்? இரட்டை இலை ஒதுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று அளித்த மனு மீது விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை இலை சின்னம்: ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஒன்றாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தனி தனியாக பிரிந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் அதிமுகவை முழுமையாக கைப்பற்றினார்கள். ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவித்த தீர்ப்பு காரணமாக அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்தார் ஓ பன்னீர்செல்வம்.. பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமனறம் உத்தரவின் காரணமாக அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றினர். அதற்கு அடுத்து, நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக இரட்டை சிலை சின்னம் மட்டுமின்றி, அதிமுக கட்சி, கொடி என எதையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் மாறினார். தற்போதும் ஓ பன்னீர்செல்வத்தின் சிவில் வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது.
இந்த சூழலில் தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று அளித்த மனு மீது விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications