இறைக்கப்பட்ட நோட்டுகள்.. சத்தமில்லாமல் தூங்கும் ஓட்டுகள்! தூக்கத்தை தொலைத்த தலைகள்! கிளைமேக்ஸ் என்ன?
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக முடிந்துவிட்டது. பல தரப்பினரும் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறி, இதை 'வரலாறு காணாத வாக்குப்பதிவு' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாக்குப்பதிவு முடிந்த பிறகும், மக்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்விகள் மட்டும் இன்னும் அடங்கவில்லை.
இன்றைய தேர்தல் அரசியலில் பணமும் தேர்தலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாகிவிட்டன என்ற கருத்து பல இடங்களில் பேசப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு முன், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகப் பரவலாக பேசப்பட்டது.

சில இடங்களில் ஐநூறு, ஆயிரம் ரூபாயில் தொடங்கி, சில தொகுதிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேலாக பணம் வழங்கப்பட்டதாகவும் மக்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன. இந்த தகவல்கள் உண்மையா பொய்யா என்ற விவாதம் இருந்தாலும், வாக்காளர்களிடையே பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாடு தேர்தல் 2026
ஒருகாலத்தில் கட்சி தொண்டர்கள் தங்களது சொந்த செலவில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காலம் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலான கட்சிகளில் பணம் இல்லாமல் எந்தச் செயல்பாடும் நடைபெறாது என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது. தேர்தல் நடத்துவது என்பது மிகப்பெரிய செலவாக மாறிவிட்டதாகவும், ஒரு வாக்கிற்கே குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகும் என்ற கணக்குகளும் பேசப்படுகின்றன.
மாதாந்திர உதவித்தொகை
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று பல கட்சிகள் வாக்குறுதிகள் அளித்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படும் என்று சில கட்சிகள் அறிவித்துள்ளன. சில கட்சிகள் மாதாந்திர உதவித்தொகையை அதிகரிப்பதாகவும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளன. இத்தகைய வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
யார் வெற்றி பெறுவார்கள்?
தேர்தல் பிரசாரம் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு மட்டும் அமைதியாக முடிந்தது. தற்போது பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் மட்டும் தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடர்ந்தபடியே தேர்தல் முடிவுகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், யார் வெற்றி பெறுவார்கள்? எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? யார் ஆட்சி அமைப்பார்கள்? யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள்? என்ற கேள்விகள் மக்களிடையே ஓயாமல் பேசப்பட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியல்
தேநீர் கடைகள் முதல் சமூக வலைதளங்கள் வரை எங்கு பார்த்தாலும் தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்களே அதிகமாக உள்ளன. இந்த முறை வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்துள்ளனர் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என்றும் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக முதல் முறையாக வாக்களித்த இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளதாகவும், அதனால் தேர்தல் முடிவு எதிர்பாராத வகையில் இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், வாக்காளர் பட்டியல் சீர்திருத்த நடவடிக்கைகளால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரித்திருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பு வாதிடுகிறது.
வேலைவாய்ப்பு
கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுபோன்ற பல திட்டங்கள் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் வாழ்க்கைச் செலவை குறைக்கும் திட்டங்களும், வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலத்த எதிர்பார்ப்பு
மொத்தத்தில், தற்போது தமிழ்நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்களுக்குள் முடிவு மறைந்து கிடக்கிறது. சொல்லப்போனால் சத்தமில்லாமல் தூங்கும் குழந்தை போல அமைதியாக உள்ளது. வாக்குகள் எண்ணப்படும் நாள் வரை யாரும் உறுதியாக எதையும் சொல்ல முடியாத நிலை தான் உள்ளது. அந்த முடிவுகள் வெளிவரும் வரை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications