ஓட்டுக்கு மினிமம் ரூ.1000.. ஞாயிற்றுக்கிழமை உச்சகட்டம்.. இன்று கிளைமேக்ஸ்.. ஆறாக பாய்கிறது பணம்
சென்னை: ஆயிரம்தான் பறக்கும்படை, 400 கோடிக்கும் மேல் பறிமுதல் செய்திருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டுவாடா ஜரூராக நடந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் தேர்தல் ஆணையத்துக்கு எப்போதுமே தலைவலியாக இருந்து வந்துள்ளது. தமிழகத்தில் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது அவர்களுக்கு தலைவலி.
2003ஆம் ஆண்டு சாத்தான்குளம் சட்டசபை இடைத்தேர்தலில் ஆரம்பித்தது இந்த ஓட்டுக்கு பணம் தரும் மோசமான கலாச்சாரம். இதன் பிறகு தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.
பலே பணப்பட்டுவாடா
என்னதான் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று பிரச்சாரங்கள் நடைபெற்று வந்தாலும் கூட.. பறக்கும் படையினர் பறந்து பறந்து பணத்தை பறிமுதல் செய்தாலும்கூட.. தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் தரும் பணிகள் கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமங்களில் ஈஸி
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அன்று வளைத்து வளைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பணம் தரப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஓரளவுக்கு கண்காணிப்பு இருக்கிறது என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்ய வேண்டியது இருக்கிறதாம். கிராமபுறங்களில் எளிதாக பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என்கிறார்கள். கட்சியின் நிர்வாகிகள் கிராம அளவில் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களுக்கு ஏற்கனவே பணம் தரப்பட்டு அது சீரான முறையில் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறதாம்.
மினிமம் 1000
ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு பண பட்டுவாடா நடைபெற்று வருகிறது. விஐபி தொகுதிகள் என்றால் 3 ஆயிரம், சில இடங்களில் 5 ஆயிரம் வரை ஒரு ஓட்டுக்கு பணம் தரப்படுகிறது என்கிறார்கள் களத்தில் உள்ளவர்கள். நகர்ப்புற பகுதிகளில் ரிஸ்க் அதிகமுள்ள ஏரியாக்களில் கரண்ட் கட் செய்யப்பட்டு விடுகிறது. இரவோடு இரவாக பணம் பரிமாற்றப்படுகிறதாம்.
தமிழகம் மட்டும்
ஞாயிற்றுக்கிழமை வரை கணிசமாக பணம் தரப்பட்டுள்ளதாம். இன்று இரவுக்குள் முழுமையாக தங்கள் பணியை முடித்துவிடுவார்கள் என்கிறார்கள்.
கட்சிகளுக்கு கிராமப்புறம் வரை நல்ல கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழகம். பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ள மாநிலம். எனவே கடைசி குடிமகன் வரை பணத்தைக் கொண்டு சென்று சேர்க்கும் வசதி இங்கு எளிதாக கிடைத்து விடுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.