மதிமுகவில் ஜாதி வெறி? பொதுக்குழுவில் வெளியேறிய துரை வைகோ- வெட்டிட்டு சிறைக்கு போறேன்- தொண்டர் 'வெறி'
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) தொழிலாளர் முன்னணியின் பொதுக் குழுவில் ஜாதிய அடிப்படையிலான சர்ச்சைகள் வெடித்த நிலையில் அந்தக் கூட்டத்தில் இருந்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி வெளியேறினார். அப்போது, உங்களை கேள்வி கேட்ட ஆளை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போகிறேன் என தொண்டர் ஒருவர் ஆவேசமாக துரை வைகோவிடம் சொல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சிகளின் முடிவுகளால் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. பாமகவில், கட்சித் தலைவர் அன்புமணியை டிஸ்மிஸ் செய்துவிட்டு நானே நிறுவனர், தலைவர் என அறிவித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ, பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட- தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தலைவர் என்கிறார்.

இன்னொரு பக்கம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக அதிமுக இணைந்துவிட்டது. பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தனை களேபர அரசியலுக்கு நடுவே இப்போது வைகோவின் மதிமுகவும் தலைப்புச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. மதிமுகவின் தொழிலாளர் முன்னணியின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் துரை வைகோ மேடையில் இருக்கும் போதே, தொழிலாளர் முன்னணியில் ஜாதிய அடிப்படையில்தான் நியமனம் செய்யப்படுகின்றனர்; ஜாதி பார்க்கிறதா நமது கட்சி? என சிலர் ஆவேசமாக கொந்தளித்தனர். இதற்கு துரை வைகோவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆனால் துரை வைகோவின் பேச்சை கேட்க அதிருப்தி நிர்வாகிகள் தயாராக இல்லை.
இதனால் அந்தக் கூட்டத்தை விட்டு துரை வைகோ திடீரென வெளியேறினார். அப்போது மதிமுக நிர்வாகிகள் துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சித்தனர். அத்துடன் தொண்டர் ஒருவர் மிக ஆவேசமாக, அவங்களை வெட்டிப் போட்டு ஜெயிலுக்குப் போறேன் அண்ணே.. என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில்தான் ஜாதி மற்றும் பண அடிப்படையில்தான் கட்சி நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போதும் மதிமுகவும் இணைந்திருக்கிறது.
தொழிலாளர் முன்னணி கூட்டத்தில் என்ன நடந்தது?
மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழு தொடர்பாக துரை வைகோ கூறியதாவது: மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று (12.04.2025) தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவராக கி. வெங்கடேசன் அவர்களும், பொதுச்செயலாளராக வழக்கறிஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களும், பொருளாளராக D. கஜேந்திரன் அவர்களும் மற்றும்
அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு தொழிலாளர் தோழர்களை சந்தித்து, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிக்கு தேர்தல் நடத்தும் பணிகளின் ஈடுபட்டு, நிர்வாகிகளின் தேர்வுக்கு பாடுபட்ட எம்.எல்.எஃப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதுடன், நமது கழகத்தின் தொழிற்சங்கமான மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி எதிர்வரும் காலங்களின் தொழிலாளர்களின் நலனுக்கு ஓங்கி உழைக்க வேண்டும் என்றும், உண்மையாக பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன ராஜ் அவர்களும், பொருளாளர் மு. செந்திலதிபன் அவர்களும், கழக துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications