விஜய் முக்கியமா? விவசாயம் முக்கியமா? அணை கட்ட கர்நாடகா ரெடி! கிணற்றில் போட்ட கல் போல தமிழக கட்சிகள்!
சென்னை: தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட வேண்டும் என கர்நாடகா பல ஆண்டுகளாக பிடிவாதம் பிடித்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் விரிவான திட்ட அறிக்கைக்கும் அனுமதி தந்துவிட்டது. ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக விமர்சனம் இருந்துள்ளது. மேலும் களத்தில் இறங்கி போராட வேண்டிய சில கட்சிகளும் அறிக்கை அரசியலோடு நின்று விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தர்மபுரியில் தொடங்கி நாகை வரை லட்சக்கணக்கான விவசாயிகளின் உயிர்நாடியாக காவிரி விளங்கி வருகிறது. குறிப்பாக டெல்டா விவசாயிகள் காவிரியை தங்கள் தாய் போலவே கருதி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா, தற்போது மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட முயன்று வருகிறது.
மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தடுத்து வைக்கும். இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனம், குடிநீர் ஆகியவற்றுக்கான நீர் தேவை வெகுவாக பாதிக்கப்படும்.

காவிரி நீர் பிரச்சனை
கடந்த பல ஆண்டுகளாகவே காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என கர்நாடகா பிடிவாதமாக இருக்கிறது. தமிழகத்தின் சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாதுரியமாக செயல்பட்ட கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரெடி ஆகி உள்ளது. மேலும் கர்நாடகாவின் முக்கிய அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
மேகதாது அணை
ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது தமிழக அரசு உரிய வாதத்தை எடுத்து வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தீர்ப்பு வந்த பிறகும் கூட ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கிணற்றில் போட்ட கல் போல மௌனம் காத்து வருகின்றன. ஏற்கனவே சொன்னது போல காவிரி நீர் என்பது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்லாது, தமிழகத்தின் எதிர்காலத்தை தாங்கி நிற்கும் ஒரு வாழ்வாதார பிரச்சனை. இதுவரை அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை கண்டித்து அறிக்கை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.
கர்நாடகா முடிவு
பாஜகவோ இது வெறும் திட்ட அறிக்கையை தான் அணை கட்டிவிடவில்லையே என்ற போக்கில் பேசி வருகிறது. தமிழக காங்கிரஸின் நிலைமை இன்னும் மோசம். கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக இருப்பதால் கருத்து தெரிவிக்க முடியாமல் தவித்து வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கர்நாடகா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க திமுக தலைமையிலான தமிழக அரசோ "SIR" பிரச்சனை, விஜயுடன் அரசியல் சண்டை என மவுனம் காத்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் சில அரசியல் விவகாரங்களும் மேகதாது பிரச்சினையை திசை திருப்பது போலவே இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள்.
நீர் உரிமை பிரச்சனை
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். கட்சி வேறுபாடுகளை கலைந்து ஓரணியில் திரண்டு கர்நாடகாவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த வேண்டும், மத்திய அரசு தனது தெளிவான நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்திருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு சாதாரண அரசியல் பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் என வேதனையுடன் சொல்கின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications